உடுமலைப்பேட்டையில் அதிர்ச்சி...! பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்த ஓவிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது...!
Udumalaipet Art teacher arrested under POCSO Act harassment schoolgirls
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடுமலைப்பேட்டை அருகே செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூன் மாதம் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியது.மேலும், மாணவிகள் தெரிவித்த புகார் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று, மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.அப்போது, அந்தப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வரும் மதன்குமார் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில், உடுமலைப்பேட்டை அனைத்து மகளிர் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, மதன்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகார் தொடர்பாக காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Udumalaipet Art teacher arrested under POCSO Act harassment schoolgirls