ஊழல் வழக்கில் கைதானவருக்கு அனுதாபமா...? - கார்த்திக்கின் ஜாமின் மனு விசாரணையின்போது நீதிபதி அதிரடி கேள்வி...!
Sympathy person arrested corruption case Judge dramatic question during Karthik bail hearing
டாஸ்மாக் நிறுவனத்துக்கான மதுபான கொள்முதல், மதுபானக்கூட உரிமம் வழங்குதல் மற்றும் மதுபானங்களை கடைகளுக்கு எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி வழங்குதல் ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் தாக்கல் செய்த இரண்டாவது ஜாமின் மனு மீதான விசாரணையை சென்னை ஐகோர்ட்டு 25-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.

டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, மதுபானக்கூடங்களுக்கு உரிமங்கள் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி வழங்கியது உள்ளிட்ட விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதையடுத்து அவர் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 2-வது முறையாக ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கார்த்திக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரை ஏற்கனவே 4 நாட்கள் காவலில் எடுத்து காவலர்கள் விசாரணை நடத்தியதாகவும், அந்த விசாரணையின்போது எந்தப் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். எனவே, அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பேரம் பேசி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை விலைக்கு வாங்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில் மனுதாரர் சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.மேலும், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அனுதாபத்தைப் பெற முயற்சிப்பதா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து, காவல்துறை தரப்பில் மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமின் மனு தொடர்பாக காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
English Summary
Sympathy person arrested corruption case Judge dramatic question during Karthik bail hearing