திண்டுக்கல்லில் கோர விபத்து...! வைக்கோல் லாரி மீது மின்சாரக் கம்பி உரசியதில் தீப்பற்றி 17 வயது சிறுவன் உடல் கருகி பலி...!
Dindigul 17 year old boy died after hay truck caught fire after electric wire touched it
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி மீது மின்சாரக் கம்பி உரசியதில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், லாரி மீது நின்றிருந்த 17 வயது சிறுவன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சாணார்பட்டி அருகே உள்ள மார்க்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வைக்கோலை லாரியில் ஏற்றி வந்து, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று கணேசன் தனது மகன் பெரிய கருப்பனுடன் வைக்கோல் விற்பனைக்காக லாரியில் சென்றுள்ளார். இருவரும் மார்க்கம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கோல் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.அப்போது லாரியில் வைக்கோல் மீது போர்த்தப்பட்டிருந்த தார்ப்பாயை அகற்றுவதற்காக பெரிய கருப்பன் லாரியின் மீது ஏறியுள்ளார்.
அந்த நேரத்தில் லாரியின் மீது தாழ்வாகச் சென்ற மின்சாரக் கம்பி, லாரியில் குவித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோல் மீது எதிர்பாராதவிதமாக உரசியுள்ளது. இதில் ஏற்பட்ட உராய்வைத் தொடர்ந்து வைக்கோலில் திடீரென தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி, லாரி முழுவதும் மளமளவென பரவியது. அப்போது தார்ப்பாயை அகற்றிக் கொண்டிருந்த பெரிய கருப்பன் தீயில் சிக்கிக்கொண்டார்.
கண் இமைக்கும் நேரத்தில் தீ அவரைச் சூழ்ந்ததால், உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.லாரியில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அப்பகுதி பொதுமக்கள் தங்களால் முடிந்தவரை அணைக்க முயன்றனர். ஆனால், வைக்கோல் என்பதால் தீ வேகமாகப் பரவியதால் அவர்களின் முயற்சியில் உடனடியாக பலன் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இதையடுத்து, உயிரிழந்த பெரிய கருப்பனின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர், உடற்கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துயர சம்பவம் குறித்து சாணார்பட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரக் கம்பி வைக்கோல் மீது உரசியதன் காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.மின்சாரக் கம்பியில் உரசிய வைக்கோல் தீப்பற்றி, 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் மார்க்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Dindigul 17 year old boy died after hay truck caught fire after electric wire touched it