முசிறி : சக மாணவர்கள் தாக்கியதில் மாணவன் உயிரிழப்பு.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இரங்கல்.!
Trichy school student death education minister condolences
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது.இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த மவுலிஸ்வரன் என்ற மாணவன் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் 3 மாணவர்கள் சேர்ந்து தாக்கியதில் மவுலீஸ்வரன் உயிரிழந்தார்.
இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மவுலீஸ்வரனைத் தாக்கிய 3 மாணவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் கவன குறைவாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திருச்சியில் அரசு பள்ளி மாணவர் உயிரிழந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த தோளூர் பட்டியை சேர்ந்த மவுலீஸ்வரன் த/பெ கோபி என்ற மாணவர் நேற்று காலை பள்ளி வளாகத்தில் மாணவர்களிடையே எதிர்பார்த்த விதமாக நடந்த சம்பவத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்த நிகழ்வின் போது பணியில் கவனக்குறைவாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் பள்ளிகளில் நிகழாத வண்ணம் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
Trichy school student death education minister condolences