போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியர்...! சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி பரிதாப மரணம்...!
Teacher arrested under POCSO Act Student undergoing treatment at Salem Hospital dies tragically
கள்ளக்குறிச்சி அருகே பாலியல் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்படும் நிலையில், விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் துறைரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில், அப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த கச்சிராயப்பாளையத்தைச் சேர்ந்த கலையழகனின் மகன் ஜெகதீசன் (46) என்பவர், பள்ளி வளாகத்தில் வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் கடும் மனவேதனைக்கு ஆளான மாணவி, சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்துள்ளார்.

இதை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக மாணவியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இதற்கிடையே, மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர் ஜெகதீசன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கச்சிராயப்பாளையம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து ஜெகதீசனை கைது செய்த காவலர்கள், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி, நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மாணவியின் உயிரிழப்பு குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவியின் உயிரிழப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.விழுப்புரம் சரக துணை காவல்துறை தலைவர் அருளரசு மேற்பார்வையில் காவலர்கள் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், அப்பகுதியில் நிலவும் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இதற்கிடையே, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஜெகதீசன் மீது துறைரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஆசிரியர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
English Summary
Teacher arrested under POCSO Act Student undergoing treatment at Salem Hospital dies tragically