“திருமணம் அவ்வளவு முக்கியமில்லை!” – பொல்லாதவன் நடிகை ரம்யா பேச்சு!
Marriage isnot that important Polladhavan actress Ramya speaks out
தமிழில் ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கன்னட நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. தமிழ் மட்டுமின்றி கன்னட திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், திருமணம் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து பேசிய ரம்யா, திருமணம் செய்து கொள்வது உண்மையிலேயே அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
“திருமணம் என்பது நான் யார் என்பதை வரையறுக்காது. திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதுதான் மிகவும் முக்கியம். அதே நேரத்தில் திருமணம் அனைவருக்கும் பொருந்தாது என்றும் நான் கூறவில்லை” என்று ரம்யா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மனிதர்களாகிய நாம் எப்போதும் மாற்றங்களை விரும்பிக் கொண்டே இருப்பதாகவும், சில நேரங்களில் அந்த மாற்றத்திற்கான எதிர்பார்ப்புகளிலிருந்துதான் பிரச்சினைகள் தொடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இருவரும் நல்ல நண்பர்களாகவும், ஒரே மாதிரியான மதிப்புகளைக் கொண்டவர்களாகவும் இருந்தால், திருமணம் செய்து கொள்வது நல்ல யோசனையாகத் தோன்றும். திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் நான் சொல்வதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்” என்றும் ரம்யா கூறியுள்ளார்.
தன்னைப் பார்த்து, “திருமணம் செய்து கொள்ள விரும்பும் சரியான நபரை நீங்கள் சந்தித்து விட்டீர்களா?” என்று பலரும் கேட்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ரம்யா, “அப்படிப்பட்ட ஒருவரை நான் இன்னும் சந்திக்கவில்லை. அதில் இப்போது கவனம் செலுத்தவும் இல்லை” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
திருமணம் என்பது வாழ்க்கையின் கட்டாயமான இலக்கு அல்ல என்றும், தனிப்பட்ட மகிழ்ச்சியும் மனநிறைவும் முக்கியம் என்றும் ரம்யா தெரிவித்துள்ள இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.
English Summary
Marriage isnot that important Polladhavan actress Ramya speaks out