டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்! பொதுமக்கள் அதிர்ச்சி!
Nagapattinnam Doctors treated torch light
நாகப்பட்டினம், நாகூரைச் சேர்ந்தவர் சென்னத் நிஷா. இவரது மகன் பாபா பக்ருதீன். பாபா இருசக்கர வாகனத்தை ஓட்ட சென்னத் நிஷா பின்னால் அமர்ந்தபடி இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் நாகப்பட்டினம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், சந்தோஷ் உள்பட 3 பேர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தினால் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாபா மற்றும் சென்னத் நிஷா இருவரையும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் படுகாயமடைந்த 3 பேருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தடைபட்டதால் மருத்துவர்கள் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரவு நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் மின்சாரம் இல்லாமல் எப்படி சிகிச்சை அளிப்பார்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் அவசர சிகிச்சை பிரிவில் இன்வெர்ட்டர் வசதி இல்லாமல் இருப்பது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Nagapattinnam Doctors treated torch light