நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம்: செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை...!
Actress Sridevi Property Dispute Madras High Court Imposes Interim Stay Proceedings Chengalpattu Court
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988-ம் ஆண்டு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 4.77 ஏக்கர் நிலத்தை சம்பந்த முதலியார் என்பவரது குடும்பத்தினரிடமிருந்து வாங்கினார்.
அந்தச் சொத்தில் தங்களுக்கும் பங்கு இருப்பதாகத் தெரிவித்து, சம்பந்த முதலியாரின் வாரிசுகள் என உரிமை கோரும் மூன்று பேர் செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து போனி கபூர் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அதைச் செங்கல்பட்டு நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி. தமிழ்செல்வி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
English Summary
Actress Sridevi Property Dispute Madras High Court Imposes Interim Stay Proceedings Chengalpattu Court