குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழர் vs தமிழர் போட்டி? பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி 'பக்கா' ஸ்கெட்ச்! களமிறங்கும் திருச்சி சிவா! ராதாகிருஷ்ணனுக்கு டப்!
Tamil vs Tamil competition in the Vice Presidential election India alliance Pakka sketch against BJP Trichy Siva enters the fray Dub for Radhakrishnan
குடியரசு துணைத்தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னரே கடந்த மாதம் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அடுத்த குடியரசு துணைத்தலைவர் யார் என்பதில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு அதிகரித்தது.
இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.பியாக இருந்த அவர், ஜார்க்கண்ட் ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கட்சி பாரபட்சம் இல்லாமல் அனைவரிடமும் நெருக்கமாக பழகும் தன்மை கொண்டவராக அவருக்கு பெயர் உள்ளது. மேலும், திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் என்றதும் குறிப்பிடத்தக்கது.
அதனால், திமுக ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தரும் வாய்ப்பு குறித்து அரசியல் கணிப்புகள் எழுந்தன. கூடுதலாக, பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக தொலைபேசியில் பேசிச் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கேட்டு இருந்தார் என்ற தகவலும் வெளியாகியது. அதேபோல, அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அனைத்து கட்சிகளும் அவருக்கு ஆதரவு தர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக மூத்த தலைவர் திருச்சி சிவா குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவின் மாநிலங்களவை குழு தலைவராக நீண்ட காலமாக செயல்பட்டு வரும் சிவா, சிறந்த நாடாளுமன்றவாதியாக அறியப்படுகிறார். பல தனிநபர் மசோதாக்களை மாநிலங்களவையில் கொண்டு வந்ததோடு, நீட் தேர்வு உள்ளிட்ட தமிழ்நாட்டுக்கு விரோதமான திட்டங்களுக்கு எதிராக வலுவான குரல் கொடுத்தவர்.
ஆனால், சமீபத்தில் “காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார்” என கூறிய அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இருந்தாலும், அவருடைய அரசியல் அனுபவம், பேச்சாற்றல் ஆகியவை அவரை இந்தியா கூட்டணியின் வலுவான வேட்பாளராக மாற்றுகின்றன.
இதனால், வரவிருக்கும் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் தமிழர் vs தமிழர் மோதல் நடைபெற வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனினும், நாடாளுமன்றத்தில் NDA-வுக்கு அதிக எம்.பிக்கள் இருப்பதால் சி.பி. ராதாகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார் என்றே அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
English Summary
Tamil vs Tamil competition in the Vice Presidential election India alliance Pakka sketch against BJP Trichy Siva enters the fray Dub for Radhakrishnan