மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: சுவேந்து அதிகாரி நாளை முதல்வராகப் பதவியேற்பு!
BJP Ends TMC Era Suvendu Adhikari to be Sworn in as West Bengal CM Tomorrow
மேற்கு வங்க மாநில அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த மமதா பானர்ஜியின் ஆதிக்கம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 207 இடங்களைக் கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி (பாஜக) முதல் முறையாக ஆட்சியைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் இம்முறை வெறும் 80 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சுவேந்து அதிகாரி
கொல்கத்தாவில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற பாஜக வெற்றி வேட்பாளர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் கூட்டத்தில், சட்டமன்றக் குழுத் தலைவராக சுவேந்து அதிகாரி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். பவானிப்பூர் மற்றும் நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுத் தனது செல்வாக்கை நிரூபித்த இவரே, மேற்கு வங்கத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.
பதவியேற்பு விழா விவரங்கள்
புதிய அரசின் பதவியேற்பு விழா நாளை (மே 9, 2026) கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிரிகேட் பரேட் கிரவுன்ஸில் (Brigade Parade Grounds) மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தேசியத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் இழுபறியும் ஆளுநரின் நடவடிக்கையும்
இந்த ஆட்சி மாற்றம் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, "மக்களின் தீர்ப்பு திருடப்பட்டுவிட்டது" எனக் கூறி மமதா பானர்ஜி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்தார்.
இந்த அரசியல் முட்டுக்கட்டையை உடைக்கும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 174 (2)(b)-இன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டமன்றத்தைக் கலைத்து அதிரடி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்தே புதிய அரசு அமைப்பதற்கான வழிவகை ஏற்பட்டது.
English Summary
BJP Ends TMC Era Suvendu Adhikari to be Sworn in as West Bengal CM Tomorrow