"கடினமான ஆண்டை கடந்துவந்தேன்"! மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்!
I made it through a tough year Anupama Parameswaran opens up
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது வாழ்க்கையில் கடந்த ஆண்டு மிகவும் கடினமான காலமாக இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து மீண்டு மன அமைதியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தனுஷ் நடித்த 'கொடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் 'சைரன்', 'தள்ளிப் போகாதே', 'டிராகன்', 'பைசன்', 'லாக் டவுன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது 'கிரேசி கல்யாணம்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அனுபமா பரமேஸ்வரன், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்தார்.
அவர் கூறுகையில், "நான் இப்போது மிகவும் நன்றாக இருக்கிறேன். என்னைப் பார்த்தால் உங்களுக்கே அது தெரியும். கடந்த ஆண்டு எனக்கு மிகவும் கடினமான காலமாக இருந்தது. அதிலிருந்து மீண்டு வந்ததால்தான் இன்று இவ்வளவு மகிழ்ச்சியாகவும் வெளிப்படையாகவும் பேச முடிகிறது. தற்போது என் வாழ்க்கையில் மிகவும் அமைதியான மனநிலையில் இருக்கிறேன்" என்றார்.
மேலும், "'கிரேசி கல்யாணம்' படப்பிடிப்பு நடந்தபோது நான் இப்போது இருக்கும் மனநிலையில் இருந்திருந்தால், அந்தப் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். ஆனால் அப்போது நான் அந்த மனநிலையில் இல்லை. இப்போது மிகவும் நிம்மதியாக இருக்கிறேன்" என்றும் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் தனது பதிவுகள் குறித்து எழும் விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்தார்.
"இது என்னுடைய சமூக வலைதள கணக்கு. அதில் என்ன பதிவிட வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்கிறேன். நான் எதையும் வேண்டுமென்றே வெளிப்படுத்தவில்லை. ஒரு பெண்ணாக என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களையும், பயணத்தையும் மட்டுமே பகிர்ந்தேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். என் வாழ்க்கையைப் பற்றி வெளியில் இருப்பவர்களுக்கு என்ன தெரியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
சமீபத்தில் அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு ஊகங்கள் பரவிய நிலையில், தற்போது அவர் பேசிய கருத்துகள் அந்தப் பதிவுடன் தொடர்புடையதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. எனினும், தனது தனிப்பட்ட உறவுகள் குறித்து அவர் நேரடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
English Summary
I made it through a tough year Anupama Parameswaran opens up