144 கோடி ரூபாய்.,! சிக்கிய அமமுக பிரமுகர்! வெளியான திடுக்கிடும் தகவல்!
AMMK person arrested in thoothukudi
தூத்துக்குடியில் 144 கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை விற்க முயற்சி செய்த, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடியில் சில மர்ம நபர்கள் 144 கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தாளமுத்து நகர் வட்ட கோவில் அருகே, அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடி கட்டியிருந்த ஒரு காரில் பதுங்கியிருந்த, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம், காரைக்குடியை சேர்ந்த வைத்தியலிங்கம், தூத்துக்குடியை சேர்ந்த மாரிதாஸ் மற்றும் முருகன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கைதானவர்களில் முத்துராமலிங்கம் என்பவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு வெட்டு அருவாள், 6 கண்ணாடி குப்பிகள் மற்றும் சி.டி.,கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கண்ணாடி குப்பிகளில் இருப்பது இரிடியம் என்றும், 140 கோடி ரூபாய் மதிப்பு உள்ளது என்றும், தூத்துக்குடியில் ஒரு நபரிடம் விற்க இவர்கள் வந்துள்ளனர் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, இவர்களிடம் இருந்த கண்ணாடியில் உள்ளது இரிடியம் தானா என்பதை ஆய்வு செய்ய தடவியல் ஆய்வகத்திற்கு அந்தக் கண்ணாடி குப்பிகளை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர்களிடம் போலீசார் இந்த பொருளை எங்கு வாங்கினர், யாரிடம் விற்க வந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
AMMK person arrested in thoothukudi