இலங்கையின் அடுத்த அதிபர் யார் என்பதில் பெரும் பரபரப்பு.!
srilanka election result
இலங்கையில் அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலானது மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தலில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது.
இதையடுத்து, தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு முதலே வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே இரண்டு கட்சி வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர். அதிகாலை நிலவரப்படி கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் இருந்து வந்தார். அதன் பின் காலை 7 மணி நிலவரப்படி, ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கோத்தபய ராஜபக்சேவை விட கூடுதலாக ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றார்.
இதையடுத்து, காலை 10 மணி நிலவரப்படி பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 29,83,754 வாக்குகளுடன் 49.48% சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் முன்னிலை பெற்றார். சஜித் பிரேமதாசா 26,79,221 வாக்குகளுடன் 44,43 சதவீத வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார். இலங்கையில் அடுத்த அதிபர் யார் என்பதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.