இந்தியா உடனான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு: டிரம்ப் - புதின் சந்திப்பால் 50 வீத வரிவிதிப்பில் மாற்றம் ஏற்படுமா..?
Sixth round of talks between India and US postponed
உக்ரைன் உடனான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். இதன் காரணமாக அமெரிக்கா- ரஷ்யா இடையே பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தும் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.
இதன்காரணமாக ரஷ்யாவுக்கு பொருளாதார தடை வைத்துள்ள ட்ரம்ப், இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25% இறக்குமதி வரிக்குக் கூடுதலாக, மேலும் 25% வரியை விதித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த 50 வீத வரி உயர்வால் இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. குறித்த புதிய வரி விதிப்பு வரும் 27-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது. இந்த சூழலில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, வரும் 25 முதல் 29 வரை இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த அமெரிக்கக் குழு, தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளது.

அடுத்ததாக ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், அதுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தத்தில், அமெரிக்காவின் வேளாண் மற்றும் பால்வளப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
ஆனால், இந்தியாவின் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், அதை ஏற்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 50% வரி விதிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, நமது நாட்டின் 79வது சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, சுதேசிப் பொருட்களின் முக்கியத்துவத்தை பற்றி வலியுறுத்தினார். இந்நிலையில், அலாஸ்காவில் உக்ரைன் - ரஷ்யா விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு நிகழ்ந்தது.

குறித்த சந்திப்புக்குப் பிறகு, தனது நிலைப்பாட்டில் இருந்து டிரம்ப் சற்று இறங்கி வந்துள்ள்ளதாக தெரிகிறது. அதாவது, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகலாம் என்று அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியா தனது முக்கிய கச்சா எண்ணெய் வாடிக்கையாளரான ரஷ்யாவை இழந்துவிட்டதாகவும், இரண்டாம் நிலை வரிகளை இந்தியாவுக்கு விதித்தால், அது பேரழிவை ஏற்படுத்தும். தேவைப்பட்டால் அதைச் செய்வேன்; ஆனால் அதற்கான தேவை ஏற்படாமல் போகலாம் என்று டிரம்ப் கூறியுள்ளார். இந்த நிலையில், அமெரிக்கா- இந்தியா நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்தியா மீதான வரி மேலும் அதிகரிக்குமா..? அல்லது 50% வரிவிதிப்பில் மாற்றங்கள் வருமா..? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
Sixth round of talks between India and US postponed