பட்டா மாறுதல் செய்ய 6000 - போலீசாரின் வலையில் சிக்கிய பெண் விஏஓ.!
woman VAO arrested for bribe in tiruvarur koradachery
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கிருஷ்ணகோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவர் தனது சகோதரர் மாசிலாமணியிடம் இருந்து இரண்டு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்யக் கோரி மதியழகன் பெருமாளகரம் கிராம நிர்வாக அலுவலர் சுதாவிடம் விண்ணப்பித்திருந்தார்.
இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட சுதா பட்டா மாறுதல் வழங்க ஆறாயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை விரும்பாத மதியழகன், விஏஓ சுதா குறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகார் அளித்தாா்.

அந்தப் புகாரின் படி, லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய ஆறாயிரம் ரூபாய் பணத்தை மதியழகனிடம் கொடுத்து பணியில் இருந்த விஏஓ சுதாவிடம் வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.
அதன் படி மதியழகன் சுதாவிடம் பணத்தை கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சுதாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டா மாறுதலுக்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
woman VAO arrested for bribe in tiruvarur koradachery