“5 மாதங்களில் ரூ.1.17 லட்சம் கோடி வருவாய்”: தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.20,349 கோடியாக உயர்வு!
TN Revenue Reaches 1 Lakh Crore in First 5 Months Deficit Stands at 20349 Crore
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கடந்த 5 மாதங்களில், தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய் ரூ.1,17,791 கோடியாகப் பதிவாகியுள்ளது. இதே காலகட்டத்தில் அரசின் செலவினங்கள் ரூ.1,38,140 கோடியாக அதிகரித்துள்ளதால், மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.20,349 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
மாநில ஜி.எஸ்.டி., முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு, ஆயத்தீர்வை மற்றும் மத்திய அரசின் வரிப் பகிர்வு போன்ற பல்வேறு வழிகளில் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. அதேவேளையில், அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், மானியங்கள் மற்றும் நலத்திட்டச் செலவுகள் காரணமாக அரசுக்கான செலவினங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
செலவினங்களின் விவரங்களை நோக்குகையில், அரசு வாங்கிய கடன்களுக்காகச் செலுத்தப்பட்ட வட்டித் தொகை மட்டும் ரூ.25,991 கோடியாகவும், ஓய்வூதியச் செலவு ரூ.21,008 கோடியாகவும் உள்ளது. மேலும், இந்த 5 மாத காலத்தில் நிலைமையைச் சமாளிக்கத் தமிழக அரசு ரூ.30,021 கோடி வரை கடன் வாங்கியுள்ளதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
வருவாய்ப் பிரிவைப் பொறுத்தவரை, மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) மூலம் அதிகபட்சமாக ரூ.34,144.06 கோடியும், வணிக வரி மூலம் ரூ.28,164.79 கோடியும், மத்திய அரசின் வரிப் பகிர்வாக ரூ.24,188 கோடியும் ஈட்டப்பட்டுள்ளது. இதுதவிர முத்திரைத்தாள் கட்டணம் (ரூ.10,493.30 கோடி), ஆயத்தீர்வை (ரூ.5,214 கோடி) மற்றும் வரிகளற்ற வருவாய் (ரூ.5,149 கோடி) ஆகியவை அரசின் முக்கிய நிதி ஆதாரங்களாக அமைந்துள்ளன.
English Summary
TN Revenue Reaches 1 Lakh Crore in First 5 Months Deficit Stands at 20349 Crore