திருத்தணி: பயங்கர கார் விபத்தில் மூவர் பலி! துக்க வீட்டிற்கு வந்தவர்களுக்கு நடந்த துயரம்!
Thiruthani Car Accident
திருத்தணிக்கு அருகேயுள்ள ஆர்.கே.பேட்டை அருகே ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்லாட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாதன் சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது 16ஆம் நாள் காரியத்திற்காக அவரது உறவினர்கள் ஸ்டாலின் (40), சம்பத்குமார் (38), கண்ணகி (50) ஆகியோர் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியிலிருந்து காரில் நல்லாட்டூருக்கு வந்தனர். காரை கார்த்திக் என்பவர் ஓட்டினார்.
காரியத்தை முடித்த பிறகு, இன்று மாலை சுமார் 5 மணியளவில் திருத்தணி-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில், வீதியோரம் இருந்த புளியமரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஸ்டாலின், சம்பத்குமார், கண்ணகி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த ஓட்டுநர் கார்த்திக்கை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸில் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் அவரை தீவிர சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றினர்.
விபத்து குறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.