மகிழ்ச்சியுடனும், பூம்புகார் மகளிர் மாநாட்டுக்கு வருவீர்.. டாக்டர் இராமதாஸ் அறிக்கை! - Seithipunal
Seithipunal


பா.ம.க. நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறவுள்ள, வன்னியர் சங்கம் ஒருங்கிணைக்கும் மகளிர் மாநாட்டுக்கு, குடும்பம்- குடும்பமாய், அணி, அணியாய் திரண்டு வந்து மாநாட்டை வெற்றிபெற வைக்குமாறு உங்களிடம் வேண்டுகிறேன்.

பெண்களுக்கு பெருமை சேர்க்கவும், பெண்மையை போற்றவும், பெண் கல்வியை வலியுறுத்தவும், பெண்கள் இல்லாமல் குடும்பமோ- நாடோ இல்லை என்பதை உலகிற்கு உரத்து சொல்லவும் இந்த மகளிர் மாநாடு அடையாள திருவிழாவாக போற்றப்பட வேண்டும்.

கண்ணகிக்கு பெருமை சேர்க்கிற பூம்புகார் மண்ணில், காவிரித்தாய் வங்கக்கடலில் கலக்கிற மண்ணில் வன்னியர் சங்கம் சார்பில் என்னுடைய தலைமையில் நடைபெறுகிற இந்த பிரம்மாண்டத் திருவிழாவில் பெண் தெய்வங்களே, பெண் தேவதைகளே, சகோதரிகளே உங்களை பாசத்தோடு எதிர்பார்த்து, வழிமேல் விழிவைத்து நான் அங்கே காத்துக் கொண்டிருப்பேன்.

உங்கள் வீரமும், எழுச்சியும் நிரம்பிய பாசத்திருமுகங்களை எதிர்பார்த்து நான் காத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் வருகையால் நான் மகிழவும், என்னைப் பார்த்து நீங்கள் மகிழவும் இந்தநாள் வரலாற்றில் இடம் பிடித்திருக்கும்.

பெண்களுக்கு எல்லா நிலையிலும் பாதுகாப்பு, சம உரிமை, கல்வியிலும், வேலையிலும் முன்னுரிமை, குழந்தைகள் நலன், மது- போதைப் பொருள்கள் ஒழிப்பில் தீவிரம், முழுமையான சமூகநீதி போன்ற எண்ணற்ற நலன்களை போற்றும் பிரகடனங்களை மாநாட்டில் முன் மொழிவதோடு அவற்றை சிந்தாமல், சிதறாமல் அறுவடை செய்வது எப்படி என்கிற திட்ட வடிவத்தையும் மாநாட்டில் பேசுவோம், செயலாற்றுவோம்.

முக்கியமாய் பெண்கள் உணர வேண்டிய ஒன்றாக, வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு இருக்கிறது. அதை முழுமையாய் வென்றெடுக்க, மகளிர் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமே இல்லை. அது எப்படி என்பதையும் என் சகோதரிகளுக்கு மாநாட்டில் விளக்கப் போகிறேன். அதேபோல் அனைத்து சமூகத்தவருக்குமான உரிய இட ஒதுக்கீடு, சாதி வாரியான கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும் மாநாட்டில் பேசுவோம்.

கண்ணகி- கோவலன் வாழ்வியலை கண்முன்னே நிறுத்தக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாடகம், அன்றைய நாளில் பூம்புகார் மண்ணில் நடக்கவுள்ளது என்பதையும்; மகளிர் பெருமளவு பங்கேற்கும் வீரதீர சாகச கலை நிகழ்ச்சிகளும் அன்றே நடைபெறவுள்ளது என்பதையும்; தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க.வினரும், வன்னியர் சங்க நிர்வாகிகளும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வார்டு நிர்வாகிகளும், உறுப்பினர்களும்; மாநாட்டு மேடையை நோக்கி வருவீர்கள் என்று உறுதிபட நம்புகிறேன்.

தமிழ்நாடே திரும்பிப் பார்த்திடவும், "ஆகா, இதுவன்றோ, மகளிர் மாநாடு" என்று வியந்து நிற்கவும்; இந்த மாநாட்டை ஒரு அடையாள மாநாடாகவே நடத்திக்காட்டப் போகிறோம். அதை செய்து முடிக்கப் போவது ராமதாசு ஆகிய நான் அல்ல; நீங்கள் தான்; மகளிர்தான்; மகளிரை முழுமையாக கொண்டாடி, மகளிரை போற்றி, மகளிர்க்கான எல்லா வகையிலான நீதியும் தடையின்றி கிடைப்பதற்கு உறுதியேற்கும் ஒரே விழா; இந்த விழாதான்.

விரைந்தும், மகிழ்ச்சியுடனும், பூம்புகார் வருவீர்; அங்கே நாம் சந்திப்போம்; நம்முடைய வெற்றிகளுக்கான புதிய பாதை குறித்து கூடி சிந்திப்போம்; பேசி முடிவெடுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Ramadoss Poombukaar Makalir manadu


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->