போலீசாருக்கு பயணபடியை முன்கூட்டியே வழங்கவேண்டும்..எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


குற்றவாளிகளை பிடிக்க வெளி மாநிலங்களுக்கு செல்லும் போலீசாருக்கு பயணபடியை முன்கூட்டியே வழங்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:ஆன்லைன் பயன்பாடு அதிகரிக்க, அதிகரிக்க மக்களிடம் ஆன்லைன் மூலம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் திருடர்களும், மோசடி செய்பவர்களும் அதிகரித்துக் கொண்டே உள்ளனர். இதனை கட்டுப்படுத்தி மக்களை பொருளாதார இழப்புகளில் இருந்து காக்க வேண்டிய புதுச்சேரி அரசும், காவல்துறையும் செய்ய தவறி வருகிறது. இதனால் நாள்தோறும் ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்து வரும் சாதாரண மக்களின் எண்ணிக்கையும் புதுச்சேரியில் அதிகரித்தபடியே உள்ளது. 

கடந்த வருடம் லாஸ்பேட்டை சேர்ந்த அசோகன் என்பவர் ரூ.1.52 கோடி போலி ஆஷ்பே கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து ஏமாந்தார். இதற்கு நடிகைகள் ஆஷ்பே கிரிப்டோகரன்சி அறிமுக விளம்பரத்தில் பங்கேற்றதும் ஒரு காரணம். அதேசமயம் தான் ஏமாந்தது குறித்து அசோகன் புதுச்சேரி சைபர் கிரைமில் புகாரும் கொடுத்தார். இப்புகார் சம்பந்தமாக விசாரணை நடத்தியபோது இதே ஆஷ்பே  கிரிப்டோ கரன்சியில் நாடு முழுக்க ஏராளமானோர் முதலீடு செய்து 100 கோடிக்குமேல் இழந்திருப்பதும், புதுச்சேரியிலும் பலர்  பலகோடியை இழந்திருப்பது தெரியவந்தது. 

இது குறித்த புகாரின்பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் முதலில் இந்த குற்றத்தில் கடைநிலையில் இருந்த 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான இம்ரான் பாட்ஷாவை கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ஆனால் இதில் முதலீடு செய்ய தூண்டுகோளாக இருந்த நடிகைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அல்லது பணத்திற்காக அந்த விளம்பரத்தில் நடித்து விட்டோம், இனி இதுபோல் மக்களை ஏமாற்றும் விளம்பரங்களில் நடிக்க மாட்டோம் என்ற அறிவிப்பையாவது அவர்கள் மூலம் வெளியிடச் செய்ய வேண்டும். 

அதுபோல் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டும் இதுவரை பணத்தை இழந்தவர்களுக்கு கொஞ்சம் கூட திருப்பி கிடைக்கவில்லை. இதற்கான காரணத்தை சைபர் கிரைம் வெளியிட வேண்டும். மேலும் விரைந்து அவர்களுக்கான பணம் முழுவதையும் கிடைக்கச் செய்ய வேண்டும். 

இந்த வழக்கில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மேலும் பலரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் உடனடியாக கைது செய்யப்படாமல் இருப்பதற்கு போக்குவரத்தில் சைபர் கிரைம் போலீசாருக்குள்ள சிரமமே காரணமாக கூறப்படுகிறது. அதாவது மேற்குவங்கம், அசாம், ஆந்திரா என எந்த வெளிமாநிலங்களுக்கு சென்றாலும் முதலில் சைபர் கிரைம் போலீசார்தான் செலவு செய்ய வேண்டியுள்ளது. புதுச்சேரி திரும்பியபின்னர் செலவு செய்ததற்குரிய ரசீதுகளை சமர்ப்பித்து பணத்தை வாங்க வேண்டியுள்ளது. எனவே அவர்களுக்கு முன்பணமாக போக்குவரத்து படியை வழங்க வேண்டும். அல்லது சைபர் கிரைம் பணத்தையே டிஜிட்டலில் நேரடியாக போலீசாரே செலவு செய்யும் அதிகாரத்தை வழங்க வேண்டும். டிஜிட்டலில் செலவு செய்வதால் தவறு செய்தாலும் கண்டுபிடித்துவிட முடியும் என்பதால் அவர்கள் சரியாகவே செலவு செய்வர். இதன் மூலம் போக்குவரத்தில் உள்ள சிரமங்கள் குறைந்த குற்றவாளிகள் விரைந்து பிடிக்கப்படுவர்என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வலியுறுத்தியுள்ளார்.. 

கடந்த பட்ஜெட்டில் சைபர் கிரைம் போலீசாருக்கு பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை வாங்கித்தர அரசு ரூ.ஒரு கோடி அளவிற்கு நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த தொழில்நுட்ப உபகரணங்களை இதுவரை வாங்கித்தரவில்லை. இதுவும் சைபர் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்கவும், அவர்களிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் உள்ளிட்ட பொருட்களில் இருந்து டேட்டாக்களை எடுக்கவும் தாமதம் ஆகின்றது. மேலும் சைபர் குற்றவாளிகளிடமிருந்து பணத்தையும் உடனடியாக மீட்க முடியவில்லை. எனவே விரைந்து சைபர் கிரைமிற்கு நவீன தொழில்நுட்ப உபகரணங்களை வாங்கித்தந்து, சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கவும், நடைபெற்றால் இழந்தவர்களுக்கு பணத்தை உடனடியாக திரும்ப பெற்றுத்தரவும் வேண்டும். 

அதுபோல் சைபர் கிரைமிற்கு கூடுதல் ஆட்களை பணியில் அமர்த்த வேண்டும். குறிப்பாக சைபர் கிரைமிற்கு என்று தனியாக காவலர்களை, அதிகாரிகளை தேர்வு செய்ய வேண்டும், அப்போது உடல் தகுதியுடன் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுனர்களாக இருப்பவர்களை தேர்வு செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் புதுச்சேரியில் சைபர் குற்றங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று  புதுச்சேரி அரசையும், காவல்துறையையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The police must be provided the travel itinerary in advance Opposition Leader Siva's insistence


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->