தமிழகத்திற்கு நல்ல செய்தி! வெளுத்து வாங்கப்போகும் கோடை மழை! தனியார் வானிலை ஆய்வாளர் சொன்ன தகவல்!
Tamilnadu Summer Rain Update
தென்காசி மாவட்ட தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா விடுத்துள்ள வானிலை முன்னறிவிப்பில், "மார்ச் 1 முதல் மே 31-ந் தேதி வரையிலான காலக்கட்டமே தமிழகத்திற்கு கோடைகாலமாகும். தற்போது ஏப்ரல் வரையிலான காலத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து இயல்பை விட வெப்பநிலை குறைவாகவே பதிவாகி வந்தது. மேலும் கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் அதிக மழையும் பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு மே மாத வெப்பநிலையானது இயல்பை விட குறைந்தே காணப்படும். அதாவது கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு வெப்பநிலை குறைவாக இருக்கும். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை சற்று குறையும். காரணம் மேற்கு திசை காற்று வலுவாக வீசும் என்பதால் வெப்பநிலை இயல்பாகவே இருக்கும்.
இதே வேளையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும். அதாவது கிழக்கு திசை கடல் காற்று வீசுவது நின்று மேற்கு திசை காற்று வீச தொடங்கும். வறண்ட மேற்கு திசை காற்று வீசும் என்பதால் சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான கடலோர மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்தே காணப்படும்.
மேலும் மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரித்தே காணப்படும்.ஆனால் கடந்த ஆண்டை போல இருக்காது.
மழையை பொறுத்தவரை மே மாதம் தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமழை பெய்யும். குறிப்பாக மே 1-ந் தேதி முதல் மே 15-ந் தேதி வரையிலான காலத்தில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய உள் மாவட்டங்களில் இயல்பை விட அதிகளவு கோடைமழையை எதிர்பார்க்கலாம். கொங்கு மாவட்டங்களிலும் மே மாதத்தில் நல்ல மழை பெய்யும்.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை மே முதல் 2 வாரத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இயல்பை விட மழை குறைவாக பதிவாகும். அதே வேளையில் தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதிகளான விளாத்திகுளம், எட்டயபுரம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ஆகிய தாலுகாவில் இயல்பை விட அதிகமழை பெய்யும்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை மே 15 வரை மழை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமழைக்கு வாய்ப்பு உள்ளது. முதல் 2 வாரத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பற்றாக்குறையாக இருந்தாலும் மே 3,4 வாரங்களான அதாவது மே 15-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலான காலத்தில் தென் மாவட்டங்கள் ஓரளவு நல்ல மழையை பெறும்.
மேலும் வெப்பநிலை அதிகமாக உள்ள நாட்களில் நண்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள், வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Tamilnadu Summer Rain Update