சொல்வது ஒன்று, செய்வது ஒன்று.. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
Saying one thing and doing another Edappadi Palaniswamis criticism
மற்றவர்களைப் பார்த்து, காப்பியடித்து, வெட்டி விளம்பரம் செய்யும் வெற்று விளம்பர ஆட்சியாளர்கள் தமிழகத்திற்குத் தேவையில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-“தி.மு.க. அரசின் நிதி அமைச்சர், 19.2.2024 அன்று சமர்ப்பித்த 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், பக்கம் 25-ல் 'தாயுமானவர்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து, 'ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்பு குறைபாடுடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற, சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கையிலே அறிவித்த இத்திட்டத்தை “ஸ்டாலின் மாடல் அகராதியின்படி போர்க்கால அடிப்படையில்' - அதாவது 18 மாதம் தாமதமாக, ஆட்சி முடிவடையும் தருவாயில், மேலே அறிவித்தபடி கல்வி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் வழங்குதல் என்ற எந்தவித நன்மைகளையும் வழங்காமல், 3 நாட்களுக்கு முன்பு 12.8.2025 அன்று, வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும், அத்திட்டத்திற்கு "தாயுமானவர்' என்றும் பெயர் சூட்டியுள்ளார். 'சொல்வது ஒன்று; செய்வது ஒன்று' இதுதான் ஸ்டாலினின் திராவிட மாடல்.
ஏற்கெனவே, எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், 21.9.2020 அன்று 9 கோடி ரூபாய் செலவில் 3501 ‘நகரும் நியாய விலைக் கடைகள்' தமிழகமெங்கும் தொடங்கி வைக்கப்பட்டது.
இப்படி எங்கள் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களுக்கு 'காப்பி பேஸ்ட்' செய்து, தனது பெயரை அல்லது புதுப் பெயரை சூட்டி அரசுப் பணத்தில் பலகோடி ரூபாய் செலவில் வெற்று விளம்பரங்கள் மேற்கொள்வதைத்தான் நாங்கள் 'பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு' என்று கூறுகிறோம். "தாயுமானவர்" என்று அழகிய தமிழில் பேசினால், மக்களுக்கு உங்கள் லட்சணம் தெரியாதா?
ரேஷன் பொருட்களை எந்த வாகனங்களில் கொண்டு செல்லப்போகிறீர்கள்? பல இடங்களில் தனியார் வாகனங்களை பயன்படுத்துவதாகத் தகவல்கள் வருகின்றன. அவர்களுக்கு பணம் யார் வழங்குவார்கள்?
பொது விநியோகத் துறையில் 200 கோடி ரூபாய்க்குமேல் பாக்கி வைத்து, நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்கும் அவல நிலையில் உள்ள இந்த அரசு, "தாயுமானவர்" என்று அழகிய தமிழில் பேசினால், மக்களுக்கு உங்கள் லட்சணம் தெரியாதா? 2024-25 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகளை உள்ளடக்கிய 'தாயுமானவர்' திட்டம் வேறா? தற்போது திரு. ஸ்டாலின் துவக்கியுள்ள ரேஷன் பொருட்களை முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் நேரடியாக வழங்கும் இத்திட்டம் வேறா?
மற்றவர்களைப் பார்த்து, காப்பியடித்து, வெட்டி விளம்பரம் செய்யும் வெற்று விளம்பர ஆட்சியாளர்கள் தமிழகத்திற்குத் தேவையில்லை. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
Saying one thing and doing another Edappadi Palaniswamis criticism