இந்தியா வரும் அர்ஜென்டினா நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி: பிரதமர் மோடியையும் சந்திக்கவுள்ளார்: கேரளாவுக்கு செல்வாரா..?
Argentine football star Messi to visit India
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மற்றும் அணிக்காக உலகக் கோப்பை, சாம்பியன் பட்டம் உள்ளிட்ட பல கோப்பைகளை பெற்றுத் தந்தவர் மெஸ்ஸி. இவருக்கு உலகம் முழுதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது அமெரிக்காவின் மியாமியில் உள்ள மேஜர் லீக் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், மெஸ்ஸி 03 நாட்கள் பயணமாக இந்தியா வர உள்ளார். இந்த பயணத்தின் போது அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி கோல்கட்டா வர உள்ள மெஸ்ஸி இந்த பயணத்தின் போது, கால்பந்து விளையாட்டில் அவர் கொண்ட உறுதிப்பாட்டை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் பாராட்டு விழாவிலும் மெஸ்ஸி கலந்து கொள்ளவுள்ளதோடு, இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்கவுள்ளார். ஈடன் கார்டனில் தலா 07 பேர் கொண்ட அணி பங்கேற்கும் கால்பந்து தொடரும் நடக்கவுள்ளது. அத்துடன், அங்கு குழந்தைகளுக்கான கால்பந்து தொடர்பான பயிற்சியிலும் மெஸ்ஸி கலந்து கொள்கிறார்.

குறித்த நிகழ்வுகள் முடிந்த பிறகு அவர், மும்பை மற்றும் ஆமதாபாத்துக்கும் செல்லவுள்ளார். மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியிலும் மெஸ்ஸி பங்கேற்கஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு இந்த நிகழ்ச்சிக்காக ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதி கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இந்த நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் பிறகு மூன்றாவது நாளான , 15-ஆம் தேதி தலைநகர் டில்லிக்கு சென்று, அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். அதனை தொடர்ந்து அவர் மீண்டும் அவருடைய நாட்டிற்கு செல்லவுள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரையில் கேரளா மாநிலத்தில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் உள்ள மாநிலம். இதன் காரணமாக, மெஸ்ஸி உள்ளிட்ட அர்ஜென்டினா அணி வீரர்களை கேரளா அழைத்து வருவதற்கு அம்மாநில அரசு தீவிரமாக முயற்சி செய்தது. இதற்காக ரூ.130 கோடி பணம் அந்நாட்டு கால்பந்து சங்கத்திடம் கொடுக்கப்பட்டு இருந்தது. வீரர்களின் பயணம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், டில்லி சென்று அர்ஜென்டினா தூதரை சந்தித்து பேசியிருந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் திருவனந்தபுரம் மைதானத்தில் நட்பு ரீதியில் நடக்கும் போட்டியிலும் மெஸ்ஸி பங்கேற்பார் எனவும் அம்மாநில அரசு அறிவித்து இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி அந்த அணி இதுவரை வரவில்லை. விதிமுறைகளை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் மீறவிட்டதாக கேரள அரசு குற்றஞ்சாட்டியிருந்தது. மெஸ்ஸி மற்றும் கேரள அரசை கண்டித்தும் அம்மாநிலத்தில் ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது.
தற்போது மெஸ்ஸி இந்தியா வருகை குறித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மெஸ்ஸி இம்முறை கேரளா செல்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால் அவர் கேரளாவுக்கு விஜயம் செய்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது கேரள மாநில கால்பந்து ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
English Summary
Argentine football star Messi to visit India