திடீரென பற்றி எரிந்த சேலம் அரசு மருத்துவமனை! நோயாளிகளின் நிலை?
Salem Government Hospital suddenly caught fire
சேலம், அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சேலம் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அறுவை சிகிச்சை மேல் மாடியில் உள்ள எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை உள் நோயாளிகள் பிரிவில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது.
இந்த தீ விபத்து காரணமாக மருத்துவமனை முழுவதும் பயங்கர புகை பரவியதால் பணியில் இருந்த செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அலறி அடித்து ஓடினர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

இது குறித்து மருத்துவ ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நோயாளிகள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றி வேறொரு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.
தீ விபத்து காரணமாக மருத்துவமனை முழுவதும் புகை மூட்டமாக காணப்படுவதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

எலும்பு மூட்டு சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் வேறொரு வார்டுகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையை தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனையில் உள்ள குளிர்சாதனத்தில் இருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Salem Government Hospital suddenly caught fire