ராஜஸ்தான் வியாபாரிகளின் ‘மெகா ஸ்கெட்ச்’...! கோவையில் ரூ.6 கோடி தங்கம், வெள்ளியுடன் எஸ்கேப் ஆனவர்கள் பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு அதிரடி கைது...!
Rajasthan traders mega sketch Those who escaped 6 crore gold and silver Coimbatore arrested after raiding house where they hiding
கோவை பெரியகடை வீதியில் செயல்பட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளிக்கட்டிகள் விற்பனை மையத்தை நடத்தி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர், நகை வியாபாரிகளின் நம்பிக்கையை பெற்று பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியை பெற்றுக்கொண்டு தலைமறைவான சம்பவத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானைச் சேர்ந்த விஜய் அம்பாலால் மற்றும் பிரதீப்குமார் ஆகியோர், கோவையில் உள்ள பல்வேறு நகை வியாபாரிகளுடன் நெருங்கிய வணிகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, விற்பனைக்காக 4 கிலோ தங்கம் மற்றும் 6 கிலோ வெள்ளிக்கட்டிகளை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.6 கோடி என மதிப்பிடப்படுகிறது. பொருட்களை பெற்றுக்கொண்ட பின்னர், இருவரும் திடீரென தொடர்பை துண்டித்துவிட்டு தலைமறைவாகியதால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து, பாதிக்கப்பட்ட நகை வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
தொழில்நுட்ப ஆதாரங்கள், குறிப்பாக செல்போன் எண்கள் மற்றும் இருப்பிட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கோவையில் உள்ள ஒரு வீட்டில் இருவரும் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த வீட்டை முற்றுகையிட்ட காவலர்கள் விஜய் அம்பாலால் மற்றும் பிரதீப்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.மேலும், அவர்கள் பெற்றுக்கொண்ட தங்கம் மற்றும் வெள்ளிக்கட்டிகள் தற்போது எங்கு உள்ளன, யாரிடம் ஒப்படைக்கப்பட்டன, இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Rajasthan traders mega sketch Those who escaped 6 crore gold and silver Coimbatore arrested after raiding house where they hiding