சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி மேயர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி மேயர் திருமதி பிரியா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கராச் சென்னை 2.0, ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி நிதி உதவி உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.4,070.10 கோடி மதிப்பில் சுமார் 1033 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் அமைக்க தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு பெரும்பாலான பணிகள் செயலாக்கத்தில் உள்ளன. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளபட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளின் முன்னேற்றம் மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வருதல், சிறுப்பழுதுகளை சீரமைக்கும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் இன்று ரிப்பன் கட்டட கூட்ட அரங்கில் நடைபெற்றது.   

இக்கூட்டத்தில் மேயர் அவர்கள், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.184.65 கோடி மதிப்பில் 40.79 கி.மீ நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும், கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.3220 கோடி மதிப்பில் 769 கி.மீ நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும், கோவளம் வடிநிலப் பகுதிகளில் மடிப்பாக்கம் மற்றும் ஆலந்தூரில் ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.150.47 கோடி மதிப்பில் 39 கி.மீ நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும், உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.119.93 கோடி மதிப்பில் 45 கி.மீ நீளத்திற்கு விடுப்பட்ட 114 இடங்களில் நடைபெற்று வரும் மழைநீல் வடிகால் பணிகள் குறித்தும், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.26.28 கோடி மதிப்பில் 9.80 கி.மீ நீளத்திற்கு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும், மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.7.41 கோடி மதிப்பிட்டில் 2 கி.மீ நீளத்திற்கு புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேயர் அவர்கள், நடைபெற்று வரும் மேற்குறிப்பிட்ட மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து மேற்கொண்டு பருவமழை காலத்திற்கு முன்னதாக முடிக்கவும், பணிகளின் முன்னேற்றம் குறித்து 2 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

தொடர்ந்து பேசிய மேயர், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தில் இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட ரு.70 கோடி மதிப்பில் 20 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்த பணிகளை விரைந்து முடித்து தொடங்கவும், தமிழ்நாடு மாநில வெள்ள தடுப்பு சிறப்பு மானிய நிதியின் கீழ் ரூ.291.36 கோடி மதிப்பில் 107.56 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கான பணி ஆணையை வழங்கி பணிகளை உடனடியாக தொடங்கவும் அறிவுறுத்தினார். 

இக்கூட்டத்தில், மேயர் அவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் பரமாரிக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வருதல் மற்றும் சிறுப்பழுதுகளை சீரமைத்தல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.  

சென்னையில் ஆண்டுதோறும் பருவமழைக் காலத்திற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் தங்கள் பகுதிக்குட்பட்ட மழைநீர் வடிகால்கள் ஆய்வு செய்யப்பட்டு வண்டல்கள் மற்றும் அடைப்புகள் உள்ள அளவீடுகள் கணக்கீடு செய்யப்பட்டு அதனடிப்படையில் தூர்வாருதல் மற்றும் சிறுபழுதுகளை சீரமைத்தல் ஆகியப் பணிகளுக்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தற்பொழுது, மழைநீர் வடிகால்களில் குறிப்பிட்ட பருவமழைக் காலத்தின் போது மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் கண்காணித்து பராமரிக்கும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கு முன் உதாரணமாக தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் மார்ச் 2022 முதல் நடைபெற்று வருகிறது.  

இதனைத் தொடர்ந்து, கொசஸ்தலையாற்று வடிநிலப் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் குறிப்பாக மணலி, மாதவரம், திரு.வி.க.நகர் மற்றும் அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் சுமார் ரூ. 39.12 கோடி மதிப்பில் 110 கி.மீ. நீள மழைநீர் வடிகால்களில் தூர்வாருதல், சிறு பழுதுகளை சீரமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.   

இதன் தொடர்ச்சியாக, மூலதன நிதியின் கீழ் ரூ.39.26 கோடி மதிப்பீட்டில் இராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் உள்ள மழைநீர் வடிகால்களில் சுமார் 1,055 கி.மீ. நீளத்திற்கு தூர்வாருதல் மற்றும் சிறுபழுதுகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள 24 சிப்பங்களாக ஒப்பம் கோரப்பட்டுள்ளது. 

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி மற்றும் மூலதன நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இவ்விரு ஒப்பந்தப் பணிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், வண்டல் வடிகட்டி தொட்டி (Silt catch pit) இல்லாத இடங்களில் புதிதாக அமைத்தல் மற்றும் எதிர்வரும் காலங்களில் மழைநீர் வடிகால்களில் தூர்வாருவதை எளிதாக்கும் வகையில் ஒவ்வொரு 5 மீட்டர் இடைவெளியிலும் திறந்து மூடும் வகையிலான சிமெண்ட் பலகைகள் அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. 

இந்தப் பணிகளை விரைந்து தொடங்கவும், பருவமழைக் காலத்திற்கு முன்னதாக மழைநீர் வடிகால்களில் உள்ள வண்டல்களை அகற்றவும், சிறுபழுதுகளை சீரமைக்கவும் அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.

மேலும், தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் சென்னையில் பருவமழையின் கரணமாக மழைநீர் தேக்கம் இல்லமால் இருக்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படக்கூடாது எனவும் கருதி பெருநகர சென்னை பகுதிகளில் சுமார் 1033.15 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்க ரூ.4070.10 கோடி மதிப்பில் திட்டங்களை அறிவுத்துள்ளார்.

எனவே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும், தூர்வாரும் பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து பருவமழை காலத்திற்கு முன்தாகவே முடிக்க வேண்டும் என இக்கூட்டத்தில் மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தெரிவித்தார்.  

இக்கூட்டத்தில் துணை மேயர் திரு.மு. மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மேற்ப்பார்வை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rainwater drainage works


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->