தலைகுப்புற கவிழ்ந்த லாரி! அடியில் சிக்கி தாயும் மகளும் கொடூர மரணம்!
palladam lorry accident
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று மதியம் நடந்த கோர விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி தலைகுப்புற விழுந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும் மகளும் நசுங்கி உயிரிழந்தனர்.
கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பல்லடம் நான்கு சாலை சந்திப்பில், கோவையிலிருந்து வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, சிக்னல் எதிர்பார்த்து நின்ற பிறகு திரும்ப முயன்றது. அந்தவேளை ஓட்டுநர் வேகமாக திருப்பியதில் லாரி திடீரென தலைகுப்புற சாய்ந்து நகராட்சி அலுவலகம் முன் விபத்துக்குள்ளானது.
அப்போது சாலையோரமாக இருசக்கர வாகனத்தில் சென்றிருந்த மகாராணி (55) மற்றும் அவரது மகள் கிருத்திகா (35), கன்டெய்னரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேரச்சமடைந்த பொதுமக்கள் விரைந்து வந்தபோதும், மூன்று கிரேன்கள் கொண்டு மட்டுமே கன்டெய்னரை தூக்கி உடல்களை மீட்டனர்.
விபத்துக்குப் பிறகு லாரியின் ஓட்டுநர் தலைமறைவானார். அவரை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த துயரமான சம்பவம் சிசிடிவி காட்சிகளால் பதிவாகி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த விபத்தால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.