நாங்கள் தான் பெரிய கட்சி என யாரும் கூற முடியாது - ஜெகத்ரட்சகன் எம்.பி.பேச்சு!
No one can say that we are the big party Jagathrakshakan MPs statement
ஓரணியில் புதுச்சேரி என்ற முழக்கத்தோடு திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை திமுக கொள்கை பரப்புச் செயலாளர் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தில் உடன்பிறப்பே வா எனும் பரப்புரையுடன் 5 இடங்களில் முகாமை தொடங்கி வைத்துள்ளோம். ஓரணியில் புதுச்சேரி என்பதே எங்கள் தாரக மந்திரம். புதுச்சேரி எப்போதும் திமுகவின் கோட்டை. வலிமையான, வளமான புதுச்சேரியை உருவாக்கும் வகையில் திமுகவின் கோட்டையை வலுப்படுத்த உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஒரு மாதம் இந்த பணி நடத்தப்பட உள்ளது.
கரூர் சம்பவத்தை பொறுத்தவரை தமிழக முதல்வர் அரசியலாக்க வேண்டாம் என கூறியுள்ளார். எந்த கட்சி தொண்டராக இருந்தாலும் அவரும் நமது குடும்பத்தை சேர்ந்தவர் என வருந்த வேண்டும் என கூறியுள்ளார். புதுச்சேரியில் திமுகவுக்கு மிகப்பெரும் வரவேற்பு உள்ளது. 2 கோடி தொண்டர்கைள கொண்ட கட்சி திமுக. கூட்டணி பற்றி தலைவர்தான் முடிவு செய்வார். நான் கழக தலைவரின் துாதுவனாக வந்துள்ளேன்.
புதுச்சேரியில் நாங்கள் தான் பெரிய கட்சி என யாரும் கூற முடியாது. அதை சொல்லும் தகுதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்குத்தான் உள்ளது. புதுச்சேரியில் நடைபெறும் ஆட்சியில் மக்கள் எவ்வளவு துன்பப்படுகிறார்கள்? புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கூட பெற முடியவில்லையே? மாநில அந்தஸ்து அளித்தால் நாங்கள்கூட ஆதரவு தருகிறோம். நாங்கள் எத்தனை ஆண்டாக மாநில அந்தஸ்து கேட்கிறோம். எவ்வளவு பின்தங்கியுள்ளோம்? கோவாவுக்கு பல ஆயிரம் கோடி அள்ளித்தரப்படுகிறது.
ஒரு தொழிற்சாலைகூட புதுச்சேரிக்கு வரவில்லை. தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருகிறார். பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறார். ஆனால் புதுச்சேரியில் ஒரு திட்டமும் செயல்படுத்த வில்லை என்பதே வருத்தமாக உள்ளது. பிரதமர் பெஸ்ட் புதுச்சேரி என கூறிவிட்டு சென்று விட்டார். திமுக ஆட்சிக்கு வந்து சுமார் 30 ஆண்டாகிவிட்டது. காங்கிரஸ் ஆட்சியிலிருந்து பல ஆண்டாகிவிட்டது. காங்கிரஸ், திமுக தனித்தனியே போராட்டம் நடத்துவது வாடிக்கையானது. அந்தந்த கட்சிகள் தேவைக்கேற்ப போராட்டங்கள் நடத்தும். சேர்ந்து நடத்த தேவையானபோது சேர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று பேசினார்.
English Summary
No one can say that we are the big party Jagathrakshakan MPs statement