பிரசவித்த இளம்பெண்ணை தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவலம்., நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?!
nilgiris pregnant lady treatment issue
நீலகிரி அருகே, 19 வயது பிரசவமான இளம்பெண்ணை சிகிச்சைக்காக தொட்டில் கட்டி தூக்கி சென்ற சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசும், தமிழக முதல்வரும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே தாளமொக்கை ஆதிவாசி கிராமம் மலை மீது உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் திடீரென பிரசவ வலி ஏற்பட்டு 7 மாதத்தில் குறை பிரசவம் ஆனது.
ஆனால், அவருக்கு தொப்புள்கொடி முழுமையாக வெளியே வரவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து சோலூர் மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சந்திரக்கா தலைமையிலான மருத்துவக் குழு, நேரில் சென்று அந்த இளம் பெண்ணுக்கு முதல் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
மேலும், அவரை ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், சந்திரலேகா தலைமையிலான மருத்துவக் குழு ஆலோசனை வழங்கியது. ஆனால், அவரை வாகனத்தில் அழைத்துச் செல்ல சாலை வசதி இல்லாத காரணத்தினால், உடனே குழந்தையுடன் அவரை உறவினர்கள் தொட்டில் கட்டி சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று, அதன் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராமத்திற்கு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டு காலம் ஆகியும் சாலை போடவில்லையா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். உடனடியாக தமிழக அரசும், தமிழக முதல்வரும் இதற்கு நடவடிக்கை எடுத்து, அந்த கிராமத்திற்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
English Summary
nilgiris pregnant lady treatment issue