இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு நல்ல செய்தி - மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!
MHA SriLankan Tamilans
இலங்கையில் ஏற்பட்ட போரும் பொருளாதார நெருக்கடியும் காரணமாக அந்நாட்டை விட்டு பலர் வெளியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவைத் தஞ்சமாகத் தேர்வு செய்த இவர்களில் பலர் தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக, இத்தமிழர்கள் சுதந்திரமாக இந்தியாவில் வாழ சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 2015 ஜனவரி 9க்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்கு வந்தும், அரசிடம் அகதிகளாக பதிவு செய்திருந்த இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, அவர்கள் இனி சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோத குடியேறிகள் என்ற முத்திரையிலிருந்து விடுபடுகின்றனர். மேலும், சமீபத்தில் அமலுக்கு வந்த குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனைகள், இத்தமிழர்களுக்கு பொருந்தாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த முடிவு, பல தசாப்தங்களாக அகதிகளாக வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர்களுக்கு நிம்மதியையும், எதிர்கால வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.