மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்..விழாக்கோலம் பூண்ட மதுரை!
Meenakshi Sundareswarar Thirukalyana Vaibhavam Madurai in a festive mood
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் நடந்தபோது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டது. தொடர்ந்து மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்குவிஜயம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.இதை முன்னிட்டுநடைபெற்ற மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில் பல்வேறு சீர்வரிசைகள் பெண் வீட்டின் சார்பில் வழங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக திருமண மண்டபம் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணி அளவில் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.
மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்களுக்கு தனியார் பக்தர்கள் சபை சார்பில் சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது.
English Summary
Meenakshi Sundareswarar Thirukalyana Vaibhavam Madurai in a festive mood