தீரன் படம் பாணியில் ஏடிஎம் கொள்ளையன் கைது.. ஆரவல்லி மலையில் தட்டி தூக்கிய தமிழக போலீஸ்..!!
Main accused arrested in Thiruvannamalai ATM robbery case
திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 இடங்களில் ரூ. 72.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. நீண்ட நாட்களாக குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் பெங்களூரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொள்ளை சம்பவத்தில் முகமது ஆரிப் என்பவர் கொள்ளைத்திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

முகமது ஆரிப் போட்டுக் கொடுத்த திட்டத்தின் படி ஹரியானாவை சேர்ந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளையை அரங்கேற்றியுள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும் கொள்ளையர்கள் கூகுள் மேப் உதவியுடன் டோல்கேட் இல்லாத பாதையை தேர்ந்தெடுத்து திருவண்ணாமலை முதல் கர்நாடகா மாநிலம் கே.ஜி.எஃப் வரை பயணித்துள்ளது தெரியவந்தது.

கே.ஜி.எஃப் பகுதியில் தாஜ் என்ற சிறிய ஹோட்டலின் மாடியில் ஒரு நாள் தங்கி விட்டு மறுநாள் குஜராத் மாநிலம் வாதோதரா பகுதிக்கு கொள்ளை கும்பல் தப்பி சென்றுள்ளது. இந்த கொள்ளை கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட குற்றவாளி முகமது ஆரிப் மட்டும் பெங்களூருவுக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஹரியானா மாநிலத்திற்கு தப்பிச் சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட மற்றொரு முக்கிய குற்றவாளி ஆசிப் ஜாவேத் துப்பாக்கி முனையில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரியானா-ராஜஸ்தான் மாநில எல்லையில் ஆரவல்லி மலைப்பகுதியில் ஆசிப் ஜாவேத்தை தமிழக போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.
English Summary
Main accused arrested in Thiruvannamalai ATM robbery case