‘ஜனநாயகன்’ படம் கசிவு: 9 பேர் கைது... எடிட்டர் பிரதீப் ராகவ் எடிட்டர் யூனியனில் இருந்து சஸ்பெண்ட்..!
jananayagan leak issue editor suspended
‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே ஆன்லைனில் பரவியதால், படக்குழுவும் தயாரிப்பு நிறுவனமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரித்த போலீசார், தொடர்ந்து நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளி உள்பட மொத்தம் 9 பேரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒரு ப்ரீலான்ஸ் உதவி விஷுவல் எடிட்டர் மூலம் சமூக வலைதளங்களுக்கு கசியவிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த நபர் மூலம் படத்தின் டிஜிட்டல் நகல் வெளியேறியதாக போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக எடிட்டர் யூனியனும் நடவடிக்கை எடுத்துள்ளது. எடிட்டர் பிரதீப் ராகவ் மீது நேரடி தொடர்பு இல்லை எனினும், பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி அவரை இடைநீக்கம் செய்துள்ளனர்.
மேலும், சங்க விதிகளை மீறி உறுப்பினர் அல்லாத ஒருவரை உதவியாளராக பயன்படுத்தியதும் இந்த நடவடிக்கைக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், திரைப்படங்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் தொழில்முறை நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
English Summary
jananayagan leak issue editor suspended