பாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் பரிதாப பலி.. மக்களே சாலையில் கவனம் தேவை..!!
Dindigul youngster died bridge construction dig
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ஆயக்குடி பகுதியில் இருந்து அங்குள்ள அமரபூண்டி - ருக்குவார்பட்டி செல்லும் சாலைகளில் விரிவாக்க பணியானது நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தின் குறுக்கே எச்சரிக்கை பலகை ஏதும் இல்லை.
இதனால் அப்பகுதியில் செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிய நிலையில், பாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் வாலிபர் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பழனி பழைய ஆயக்குடி பகுதியை சார்ந்தவர் முருகன். இவர் விவசாயியாக இருந்து வருகிறார்.
இவரது 22 வயது பட்டதாரி மகன் சதீஷ்குமார், தந்தையுடன் சேர்ந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். சதீஷ் தனது நண்பர்களை காண இரு சக்கர வாகனத்தில் ருக்குவார்பட்டிக்கு சென்று, நண்பர்களை சந்தித்துவிட்டு ஆயக்குடி நோக்கி பயணம் செய்துள்ளார்.
பாலத்திற்கு தோண்டப்பட்டுள்ள பள்ளம் தொடர்பான விஷயத்தை மறந்த இளைஞர், இரு சக்கர வாகனத்துடன் பள்ளத்திற்குள் பாய்ந்து, தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அலட்சியமாக செயல்பட்ட ஒப்பந்தத்தாரின் மீது வழக்குப்பதிவு செய்ய கூறி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Dindigul youngster died bridge construction dig