நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா...? - இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்தும் தீராத வதந்திகள்...!
Netanyahu Alive Rumors Persist Despite Clarification from Israeli Prime Minister Office
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. நெதன்யாகு கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது போன்ற வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

ஆனால், அந்த வீடியோவில் நெதன்யாகுவின் கையில் ஐந்து விரல்களுக்குப் பதிலாக ஆறு விரல்கள் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளதால், அது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட 'டீப்ஃபேக்' (Deepfake) வீடியோ என நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுவாக ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் உருவங்களில் இத்தகைய குறைபாடுகள் ஏற்படுவது வழக்கம் என்பதால், அவரது உடல் அசைவுகள் மற்றும் முக பாவனைகள் இயற்கையாக இல்லை என்று பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
முன்னதாக, ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் நெதன்யாகு காயமடைந்திருக்கலாம் அல்லது உயிரிழந்திருக்கலாம் என ஈரானிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கடந்த சில நாட்களாக அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காததும், அமெரிக்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டதும் இந்த சந்தேகங்களுக்கு வலு சேர்த்தது. இருப்பினும், இப்புகார்களை மறுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், நெதன்யாகு நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஈரான் புரட்சிகர காவல்படை விடுத்துள்ள எச்சரிக்கையில், நெதன்யாகு உயிருடன் இருக்கும் பட்சத்தில் அவரை வீழ்த்தும் பணி தொடரும் எனத் தெரிவித்துள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
English Summary
Netanyahu Alive Rumors Persist Despite Clarification from Israeli Prime Minister Office