“அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை!”: சமையல் எரிவாயு மானியம் பெற ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவிப்பு!
Central Govt Mandates Biometric Aadhaar Verification for LPG Subsidy from October 1
வீட்டு உபயோகத்திற்கான மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதற்கு, வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு (Biometric Aadhaar Authentication) கட்டாயமாக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு மானியம் தகுதியான மற்றும் உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை கொண்டுவரப்பட்டுள்ளது.
வணிக மற்றும் தொழிற்துறைத் தேவைகளுக்காகச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், போலி மற்றும் தகுதியற்ற இணைப்புகளை நீக்குவதற்கும் இந்த ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு அவசியமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஏற்கனவே இந்தச் சரிபார்ப்பை நிறைவு செய்த நுகர்வோர்கள் மீண்டும் இதனைச் செய்ய வேண்டியதில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இச்சரிபார்ப்பை எவ்வித சிரமமும் இன்றி எளிய முறையில் முடிப்பதற்குப் பல்வேறு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, வீடுகளுக்குச் சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியர்களிடம் உள்ள மொபைல் செயலி வாயிலாகவோ அல்லது நேரடியாக எரிவாயு முகவர் (Distributor) அலுவலகத்திற்குச் சென்றோ பொதுமக்கள் தங்களது பயோமெட்ரிக் பதிவை மேற்கொள்ளலாம்.
இதுதவிர, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 'IndianOil ONE', பாரத் பெட்ரோலியத்தின் 'HelloBPCL' மற்றும் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் 'HP PAY' ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலிகள் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே இச்சரிபார்ப்பை எளிதாக நிறைவு செய்யலாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
English Summary
Central Govt Mandates Biometric Aadhaar Verification for LPG Subsidy from October 1