#திருச்சி || ரயிலைக் கவிழ்க்க சதி... குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறும் தனிப்படை..!!
ATNPolice struggling to catch criminals who put tires on tracks
கடந்த மே 2ம் தேதி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோவில் - வாளாடி ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் வந்து போது தண்டவாளத்தில் 2 லாரி டயர்கள் இருப்பதை கண்டு ரயில் ஓட்டுநர் ரயிலின் வேகத்தை குறைத்த நிலையில் ஒரு டயர் தண்டவாளத்திற்கு வெளியே வீசப்பட்டது. ஆனால் மற்றொரு டயர் ரயில் எஞ்சினில் சிக்கியது.
இதனைத் தொடர்ந்து ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. எஞ்சினில் சிக்கிய லாரி டயரை வெளியே எடுத்து சரி செய்த பின்னர் 40 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

ரயில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலை விபத்துக்கு உள்ளாக்கும் வகையில் டயர்கள் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தண்டவாளத்தில் லாரி டயர் வைத்தது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நேற்று 8 பேரை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் ரயில் தண்டவாளத்தில் லாரி டயர்களை போட்ட மர்ம நபர்களை பிடிக்க போதிய துப்பு கிடைக்காததால் தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் மோப்ப நாய்களைக் கொண்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்று மூன்று நாட்கள் நிறைவடைந்த நிலையிலும் குற்றவாளிகளை நெருங்க எந்தவித தடயமும், ஆதாரமும் கிடைக்காததால் தமிழ்நாடு காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
English Summary
ATNPolice struggling to catch criminals who put tires on tracks