சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டம்.. கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர்!
A plan to improve the tourism sectorThe deputy governor inspected the coastal areas
மணப்பட்டு- மூர்த்திக்குப்பம்-புது குப்பம், பால்மிரா கடற்கரையை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பார்வையிட்டார்.
பால்மிரா கடற்கரை பகுதியில், தனியார் பங்களிப்புடன் கூடிய உயர்தர ஓட்டல், மாநாடு அரங்கம், 200 அரை படுக்கை வசதி கொண்ட தங்கும் விடுதி, பொழுதுபோக்கு பூங்கா, வண்டி நிறுத்தும் இடம் உள்ளிட்ட சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான சுற்றுலா நகரத் திட்டத்திற்கான வரைவு அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா நகரத் திட்டம் நிறைவடையும் பட்சத்தில், புதுச்சேரி அரசுக்கு சுமார் 40 முதல் 50 கோடி வரை ஆண்டு வருமானம் கிடைக்கும். மேலும், அந்த பகுதி பொருளாதார வளர்ச்சி அடைவதோடு சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்த மும்பையைச் சேர்ந்த ஆலோசனைக் குழு அதிகாரிகள் இந்த திட்டம் குறித்து துணைநிலை ஆளுநருக்கு விரிவாக விளக்கினர். இந்த திட்டம், ஏற்கனவே வளர்ந்து வரும் சுற்றுலாத்துறை விரைவாக வளர்ச்சி அடையவும், புதுச்சேரியை ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக மேம்படுத்தவும் உதவும் என்பதால் இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கான அனைத்து ஆக்கப்பூர்வமான பணிகளையும் மேற்கொள்ளுமாறு துணைநிலை ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சுற்றுலாத்துறை மற்றும் துணைநிலை ஆளுநரின் செயலர் மணிகண்டன், சுற்றுலாத்துறை இயக்குனர் முரளிதரன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
English Summary
A plan to improve the tourism sectorThe deputy governor inspected the coastal areas