பாக். குரலுக்கு செவி சாய்க்காத ஐசிசி.. மோடி ஸ்டேடியத்தில் மோதும் இந்தியா, பாகிஸ்தான்.!!
India Pakistan world cup cricket match at Modi Stadium
ஐசிசி உலகக் கோப்பையின் 13 வது தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை ஐசிசி மற்றும் பிசிசிஐ கூட்டாக இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 5ஆம் தேதி உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
மேலும் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8ம் தேதி எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 5 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் அக்டோபர் 16ஆம் தேதி இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் டெல்லியில் மோத உள்ளது.

அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாட மறுப்பு தெரிவித்திருந்தது. இந்தியா பாகிஸ்தான் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றால் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை எழ கூடும். எனவே அகமதாபாத் மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியை பட்டியலிட வேண்டாம் என வலியுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் கருத்திற்கு மதிப்பளிக்காமல் ஐசிசி இந்தியா பாகிஸ்தான் போட்டியை அகமதாபாத்தில் பட்டியலிட்டுள்ளது. நீண்ட நாட்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்து வரும் நிலையில் அதற்கு செவி சாய்க்காமல் இந்தியா பாகிஸ்தான் போட்டி பட்டியலிட்டு இருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
India Pakistan world cup cricket match at Modi Stadium