நாளை பிறக்கிறது ஆனி மாதம் .. எந்த எந்த தெய்வங்களை வணங்காலம்? - Seithipunal
Seithipunal


 ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி எனப்படும்.

உத்திராயணப் புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி. இது தேவர்களின் சாஸ்திரம். மேலும் ஆனிமாதம் இளவேனிற் காலம். கோடையின் தாக்கம் நீங்கி இதமான காற்று வீசும். தமிழ் மாதங்களில் ஆனி மாதம் நீண்ட பகல் பொழுதைக் கொண்ட மாதம். சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆனிமாதத்தை மிதுனமாதம் / ஜேஷ்டமாதம் என்பர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய எனப் பொருள். ஜேஷ்டம் என்றால் கேட்டை நட்சத்திரம். 

மஹாவிஷ்ணு எடுத்த கூர்ம அவதாரம் நிகழ்வு ஆனி மாதத்தில்  தான் நடத்துள்ளது.

ஆனித்திருமஞ்சனம்! 

சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் அதாவது சந்திரன் கன்னி ராசியிலும் சஞ்சரிக்கும் நேரமே ஆனித்திருமஞ்சனத் திருநாள். ஆனி உத்திரத் திருநாளே ஆனித் திருமஞ்சனம் என சிறப்பிக்கப் படும். ஆனி மாதம், உத்திரம் நட்சத்திரத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும்.

கல்விக்கு அதிபதியாகிய புதன் கிரகத்தின் ஆளுமை பெற்ற ராசிகளான மிதுனம், கன்னி இரண்டும் உள்ள ஆனிமாதத்தில் நடக்கும்

ஆனித்திருமஞ்சனத்தைக் காணும் பேறுபெற்றவர்கள் இறையருளால் அறிவில் சிறந்து விளங்குவர்.

ஆனித் திருமஞ்சனம் சிவனுக்கு உரியதானாலும் நடராஜருக்கே முக்யத்துவம். நடராஜர் உள்ள எல்லா சிவாலாயங்களிலும் ஆனித்திருமஞ்சனம் நடைபெற்றாலும் சிதம்பரத்தில் ந்டைபெறும் ஆனித் திருமஞ்சனமே சிறப்பானதாகும். திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள்.

ஜேஷ்டாபிஷேகம்! 

ஆனி  மாதத்தைக் குறிக்கும் கேட்டை நட்சத்திரத்தில் ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் ஆனி கேட்டை  திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும்.

ஆனி  பௌர்ணமி! 

திருச்சி உறையூரில் மேற்கூரை இல்லாமல்  திறந்த வெளி கொண்ட கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு ஆனி  பௌர்ணமியன்று மாம்பழங்களால் அபிஷேகம் நடைபெறும். கூடை  கூடையாக மாம்பழங்களை அம்மன்மீது அபிஷேகிப்பார்கள். பிறகு அந்த மாம்பழங்களை பர்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.

இதேபோன்று திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தாயுமானவர் கோயிலில் ஆனி பௌர்ணமி அன்று ஸ்ரீ தாயுமானவ சுவாமிக்கு வாழைப்  பழத்தார்கள் சமர்ப்பித்து, தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழ வேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை செய்வார்கள். பூஜைகள் நிறைவு  பெற்றதும் அர்ச்சகர், அந்த வாழைப்பழங்களை பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிப்பார்.

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி, மாங்கனித் திருவிழா நான்கு நாள்கள் நடைபெறும். ஆனி பௌர்ணமியன்று சுவாமியும்  அம்பாளும் வீதிவுலா வரும் போது காரைக்கால் அம்மையார் திருவுருவச் சிலையையும் தரிசிக்கலாம். அப்போது பக்தர்கள், மாடி வீடுகளில் ஏறி மாடியின்  மேல்புறத்தில் நின்று கொண்டு மாம்பழங்களை கூடைகூடையாக சுவாமி ஊர்வலத்தின் மீது அபிஷேகிப்பார்கள்.

ஆனி பௌர்ணமியையொட்டி,  மன்னார்குடி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ  ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள தீர்த்தக் குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.

நிர்ஜலா ஏகாதசி- பீம ஏகாதசி

ஆனி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி எனப்படும். வியாசர் தருமருக்கு ஏகாதசி விரதம் பற்றி கூறியபோது அங்கு வந்த பீமன் தன் வயிறில் விருகம் என்ற அக்னி உள்ளதால் அளவில்லா உணவு உண்டால்தான் என் பசி அடங்கும். எல்லா ஏகதசியன்றும் விரதம் அனுஷ்டிக்க முடியாது என்றாலும் ஆண்டிற்கு ஒரு முறை விரதம் அனுஷ்டிக்க எளிய முறையைச் சொல்லுங்கள் என்று கேட்டான். நிர்ஜலா ஏகாதசி அன்று நீர் அருந்தாமல் விரதம் அனுஷ்டிக்குமாறு வியாசர் கூரினார். எனவே இந்த ஏகாதசி- ஆனிமாத சுக்லபட்ச ஏகாதசி- நிர்ஜலா ஏகாதசி- பீம ஏகாதசி எனப்படும்.

ஆஷாட நவராத்திரி

ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி ஆஷாட நவராத்திரி எனப்படும்

மாணிக்கவாசகர்  குருபூஜை

ஆனி மாத  மக நட்சத்திரத்தில் பொற்சபையில் மணிவாசகர்  கலந்த நாள்.

அப்பர் சுவாமிகளின் குருபூஜை

அருள் மிகு அப்பர் சுவாமிகளின் குருபூஜை ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomorrow is the month of Ani which deities should we worship?


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->