திருவிழாவின் கடைசி நாள் குதூகலம்... கிடா வெட்டுதல்... எவ்வாறு செய்ய வேண்டும்?!
kidavettu thiruvizha at village
கிடா வெட்டுதல் சடங்கு:
திருவிழாவின் கடைசி நாளில் செய்யும் ஒரு விழா தான் கிடா வெட்டு. கிடா வெட்டு என்று சொன்னாலே நம் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சி வரும் பாருங்க... எப்படா கிடா வெட்டு வரும் என ஆர்வமாக இருப்போம்.. ஏனா கிடா வெட்டு அன்று நாம் ரசித்து ருசித்து சாப்பிடுவோம்.
கிராமங்களில் கிடா வெட்டுதல் ஒரு மதச்சடங்கு ஆகும். இதில் தங்களது வீரத்தைக் காட்டுவதற்காகவே கிடா மீசை வைத்த பூசாரி இருப்பார்கள்.
ஒரே வெட்டில் தலை தனியாகப் போக வேண்டும் என்று சூளுரைத்துக் கொண்டு வெட்டித் தள்ளுவார்கள். இதற்கு அரிவாளைப் பதமாகத் தீட்டிக் கொண்டு இருப்பார்கள்.
இத்தகைய காட்சிகளை இளகிய மனம் படைத்தவர்களும், குழந்தைகளும் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் மனதில் வன்முறை எண்ணங்களை இது தூண்டும்.
எவ்வாறு செய்ய வேண்டும்?
முதலில் கோவிலுக்கு சென்று பொங்கல் வைப்பார்கள். பொங்கல் வைத்தல் என்பது பச்சரிசியில் வெல்லம், நெய் ஆகியவற்றை போட்டு சர்க்கரைப் பொங்கல் வைப்பார்கள். சிலர் பச்சரிசியை வைத்து வெண்பொங்கல் வைப்பர்கள். பிறகு கிடா வெட்டுதல் சடங்கு நடைபெறும்.
ஆடு, சேவல், பன்றி போன்ற விலங்குகளில் ஆண் பாலினத்தை சேர்ந்தவையே பலியிடுவதற்காக தேர்வு செய்யப்படுகின்றன. கோழியாக இருந்தாலும் அதன் ஆண் பாலினமான சேவலையே பலியிடத் தேர்வு செய்கின்றனர்.
பலியிடத் தயாராக உள்ள விலங்கு அல்லது சேவல் மீது மஞ்சள் கலந்த நீர் தெளிக்கப்படுகிறது. அதன் கழுத்தில் மலர்களாலான சிறு மாலைத் துண்டு அணிவிக்கப்படுகிறது. பின்னர் மஞ்சள் நீர் தெளிக்கப்படுகிறது. அது மூன்று முறை தலையைக் குலுக்கும்போது அது சம்மதம் தெரிவித்து விட்டதாக கருதி அதைப் பலியிடுகின்றனர்.
பலியிட்ட பின் என்ன செய்ய வேண்டும்?
பலி கொடுக்கப்பட்ட ஆடு அல்லது கோழியின் இறைச்சியை உணவாக சமைத்து சிறு தெய்வங்கள் முன்பு படைத்துவிட்டு அந்த அசைவ உணவை அனைவரும் உண்ணும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
இதுபோன்ற பலியிட்டு வழிபடும் வழக்கம் காவல் தெய்வங்களான கருப்பசாமி, மாடசாமி, இசக்கியம்மன் போன்ற சிறுதெய்வ வழிபாடுகளிலேயே அதிகம் நடைபெறுகிறது. மாரியம்மன் கோவில்களில் இந்த பலியிடும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டாலும் அது மாரியம்மனுக்குப் படைக்கப்படுவதில்லை. கோயிலிலுள்ள காவல் தெய்வமான கருப்பசாமிக்குப் படைப்பதாகவே கருதப்படுகிறது.
English Summary
kidavettu thiruvizha at village