2021 அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்.. ஏப்ரல் 6 முதல் செப்டம்பர் 16 வரை...!!
Adhisara Gurupeyarchr For rishaba raasi
அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்:
மகர ராசியில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கக்கூடிய முழு சுபரான பிரகஸ்பதி என்று அழைக்கப்படுகின்ற தேவகுரு, வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி வரை அதிசாரமாக கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
இந்த அதிசார குருப்பெயர்ச்சியின் மூலமாக ஒவ்வொரு ராசிக்கும் ஏற்படக்கூடிய சுப மற்றும் அசுப பலன்கள் யாது என்று பார்ப்போம்.
இதுவரை ரிஷப ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த குருபகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சுபரான குரு தான் நின்ற ராசியிலிருந்து
ஐந்தாம் பார்வையாக மிதுன ராசியையும்
ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும்
ஒன்பதாம் பார்வையாக துலாம் ராசியையும் பார்வையிட போகின்றார்.
குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடமே மேன்மை அளிக்கும் என்பது ஜோதிட விதியாகும். அதன் அடிப்படையில் குருவின் பார்வையினால் ரிஷப ராசியினர் அடையப்போகும் பலாபலன்களை பற்றி பார்ப்போம்.
உத்தியோகம் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்திருந்த மாற்றமான தருணங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பேச்சு சாதுர்யத்தின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பதற்கான தருணங்கள் உருவாகும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீடுகளை மாற்றி அமைப்பீர்கள்.
சிலருக்கு புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான யோகங்கள் ஏற்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் யாவும் குறைந்து கட்டுப்பாட்டுக்குள் வரும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உடலையும், மனதையும் வருத்திக் கொண்டிருந்த நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் இருந்த குழப்பங்களை நீக்கி தெளிவுகளை அளிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் விளைச்சலை மேம்படுத்துவதற்கான உதவிகள் கிடைக்கும்.
வங்கி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பங்காளி வகை உறவுகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விலகி சென்ற மனதிற்கு நெருக்கமானவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சொத்துக்கள் மீதான வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உபரி வருமானங்கள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.
மேற்கண்ட பலன்கள் யாவும் தசாபுத்திகள் நன்முறையில் இருக்கும்பட்சத்தில் சாதகமாக அமையும்.
English Summary
Adhisara Gurupeyarchr For rishaba raasi