தினம் ஒரு திருத்தலம்... பாச கயிற்றின் தழும்பு... ஆயுள் விருத்தி தரும் தலம்...!!
abhirami amirthakadeswarar temple thirukadaiyur
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் :
அமைவிடம் :
திருக்கடையூரில் ஸ்ரீஅபிராமி உடனுறையும் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில் 51 சக்தி பீடங்களில் கால சக்தி பீடமாகும்.
மாவட்டம் :
திருக்கடையூர், தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.
எப்படி செல்வது?
சிதம்பரத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் நாகை செல்லும் பேருந்துகள் திருக்கடையூர் வழியாகச் செல்கின்றன.
கோயில் சிறப்பு :
இத்தலம் நித்திய திருக்கல்யாண தலமாக திகழ்கிறது. எமபயம் நீக்கும் தலங்களில் திருக்கடையூர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம்.
காலன் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு லிங்கத்திலிருந்து வெடித்துத் தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் ஏற்பட்ட பிளவும் நன்றாகத் தெரியும். இந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டுக்கு 11 முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.
இத்தலம் ஆயுள் விருத்தி தலம் என்ற சிறப்பு பெற்றதாகும். சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், ஜென்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் இது.
கோயில் திருவிழா :
ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி பூஜை, கந்த சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேஷ நாட்கள் ஆகும். தை அமாவாசை அன்று அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேஷம்.
வேண்டுதல் :
50ஆம் கல்யாண ஆண்டு விழா, ஜாதக ரீதியான தோஷங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடுகின்றனர். அம்பிகையை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தை வரம், கல்வி வேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள்.
இத்தல மூர்த்தியான காலசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும். நோய் நொடி விலகும். எமபயம் அண்டாது. துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன் :
அங்க பிரதட்சணம், கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாற்றுதல், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் குழந்தை தத்துக் கொடுத்தல் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். வியாதிகள் குணமாக சங்காபிஷேகமும், புத்திரபாக்கியம் வேண்டுவோர் ருத்ராபிஷேகமும் சுவாமிக்கு செய்கின்றனர்.
அம்மனுக்கு புடவை சாற்றுதலும், அபிஷேகம் செய்தலும், சந்தனகாப்பு சாற்றுதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், புதுத்தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜித்து, கட்டிக்கொண்டு, ஏற்கனவே கட்டியிருந்த தாலியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
English Summary
abhirami amirthakadeswarar temple thirukadaiyur