"தவெக ஆட்சியின் ஆயுட்காலம் ஊசலாடுகிறது!" - குதிரை பேரப் புகாருடன் டிடிவி தினகரன் திருச்சியில் அதிரடிப் பேட்டி!
TVK Government Lifespan Hanging by a Thread TTV Dhinakaran Alleges Horse Trading in Trichy
திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு குறித்தும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக-விற்கு ஆதரவளிப்பது குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
"குதிரை பேரம் பேசி ஆட்சி" - விஜய் மீது சாடல்:
"மாற்றத்தை விரும்பிய மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுத்து ஜனநாயகத்தைக் காப்பாற்றியுள்ளனர். ஆனால், தவெக அரசு தற்போது செய்துள்ளது அப்பட்டமான குதிரை பேரம். 'குதிரை வேகத்தில் செயல்படுவோம்' என்று கூறும் முதலமைச்சர் விஜய், உண்மையில் எம்.எல்.ஏ.க்களைப் பேரம் பேசித்தான் அந்த குதிரையை வாங்கியுள்ளார் என்பதை நாங்கள் விரைவில் நிரூபிப்போம். தவெக அரசின் ஆயுட்காலம் தற்போது ஊசலாடிக் கொண்டுதான் இருக்கிறது" என்று தினகரன் சாடினார்.
அதிமுக மற்றும் அமமுக தரப்பிலிருந்து தவெக அரசுக்கு ஆதரவு தருவது குறித்து அவர் பேசியதாவது: எம்.எல்.ஏ.க்கள் அபகரிப்பு: "அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வை தவெகவினர் சட்டவிரோதமாக அபகரித்துள்ளனர். தேர்தலின் போது அதிமுகவை ஊழல் கட்சி என்று ஏளனமாகப் பேசிய விஜய்யை, இப்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரிப்பது எந்த விதத்தில் நியாயம்? பதவிக்காக அவர்கள் எடுத்துள்ள இந்த முடிவு, வரலாற்றில் அவர்களை மன்னிக்காது."
சிபிஐ விசாரணை கோரிக்கை: "தவெக அரசை ஆதரிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும், அமமுகவிலிருந்து சென்றவர்களுக்கும் புதிய அமைச்சரவையில் அமைச்சர் பதவி கொடுத்தால், அதற்கு எதிராக நாங்கள் சிபிஐ (CBI) விசாரணை கோருவோம்."
ஏஜென்டாக செங்கோட்டையன்: "அதிமுகவை முற்றிலும் அழிக்கத் தவெகவின் ஏஜென்டாக கே.ஏ. செங்கோட்டையன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கட்சி கைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காகத் தவெகவை ஆதரிப்பது, அதிமுகவை அவர்களே அழிப்பதற்குச் சமம். மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் காரில் அமர்ந்து அவசர அவசரமாகக் கையொப்பமிட்ட வீடியோவை எடுத்தது யார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்" என்று தினகரன் அம்பலப்படுத்தினார்.
கூட்டணி மற்றும் எதிர்கால அரசியல்:
திமுக-காங்கிரஸ் கூட்டணி முறிவு குறித்துப் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி எப்படியாவது அமைச்சர் பதவியைப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காகவே திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது என்றார். அதேநேரம், அமைச்சர் பதவி கேட்காத கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஆகிய கட்சிகள், அப்படிப் கேட்டிருந்தால் அவர்களின் மானமே போயிருக்கும் என்றும் விமர்சித்தார்.
"நாங்கள் எப்போதும் போலத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் (NDA) நீடிக்கிறோம். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே உள்கட்சி சலசலப்புகளைக் கடந்து வந்த இயக்கம் அதிமுக. அதை யாராலும் அழிக்க முடியாது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் சாதனை படைக்கும், அதற்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்" என்று டிடிவி தினகரன் தனது பேட்டியில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
English Summary
TVK Government Lifespan Hanging by a Thread TTV Dhinakaran Alleges Horse Trading in Trichy