இன்னும் கொஞ்ச நாள்தான்... குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட் எப்போது பாயும்...? இஸ்ரோ தலைவரின் அதிரடி பதில்...!
Only few more days When rocket launch from Kulasekaranpattinam ISRO chief dramatic response
இஸ்ரோ தலைவர் நாராயணன் விண்வெளித் துறையின் வேகமான முன்னேற்றம், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.அவர் குறிப்பிட்டதாவது,"விண்வெளித் துறையில் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே, ஒரு தனியார் ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் முழுமையாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ராக்கெட், தனது முதல் ஏவுதல் முயற்சியிலேயே செயற்கைக்கோளை வெற்றிகரமாக பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.
இந்திய விண்வெளி வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.ராக்கெட்டை வடிவமைத்து, சோதனை செய்து, வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவது என்பது மிகவும் சிக்கலானதும், உயர்தர தொழில்நுட்ப திறனை கோரும் செயல்முறையாகும். அந்த வகையில், முதல் முயற்சியிலேயே வெற்றியை பதிவு செய்துள்ள ஸ்கைரூட் நிறுவனத்தின் சாதனை பாராட்டுக்குரியது.

இந்த வெற்றி இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைக்கு புதிய நம்பிக்கையையும், உலக அரங்கில் வலுவான அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளது.இது வெறும் தொடக்கம் மட்டுமே. நடப்பு ஆண்டுக்குள் மேலும் ஆறு முதல் ஏழு ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கான திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் இரண்டு ராக்கெட்டுகளின் தயாரிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, இறுதிக்கட்ட சோதனைகளில் உள்ளன. மேலும் ஐந்து ராக்கெட்டுகள் தயாரிப்பின் இறுதி நிலையை எட்டியுள்ளதால், அடுத்தடுத்த ஏவுதல்களுக்கு தேவையான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் பணிகளும் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இந்த ஆண்டு நிறைவடையும் என திட்டமிடப்பட்டிருந்தாலும், சில தவிர்க்க முடியாத காரணங்களால் பணிகள் சிறிது தாமதமானுள்ளன. இருப்பினும், 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அந்த ஏவுதளம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரோவில் பணியாற்றி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாக விருப்ப ஓய்வு பெற்று வெளியேறினாலும், அதனால் இஸ்ரோவின் ஆராய்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் அல்லது எதிர்கால விண்வெளித் திட்டங்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
புதிய தலைமுறை விஞ்ஞானிகள் திறமையாக பொறுப்பேற்று, இந்தியாவின் விண்வெளிப் பயணத்தை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வார்கள் என்ற முழு நம்பிக்கை இருப்பதாக நாராயணன் தெரிவித்தார்.
English Summary
Only few more days When rocket launch from Kulasekaranpattinam ISRO chief dramatic response