திமுக சேர்மனால் "என் உயிருக்கு ஆபத்து"!! பாதுகாப்பு கோரி மாவட்ட பஞ்சாயத்து தலைவி மனு.!!
Tenkasi DMK panchayat president ask police protection
நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளன. பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினர் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்ட திமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த ஜூலை மாதம் மணிப்பூர் வன்கொடுமை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுக மாவட்ட சேர்மன் தமிழ்ச்செல்வியை மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் பேசவிடாமல் தடுத்தார்.

இதனால் கோபமடைந்த தமிழ்ச்செல்வி மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து போராட்டம் செய்கிறோம். இங்கு நடப்பதற்கும் மணிப்பூரில் நடந்ததற்கும் என்ன வித்தியாசம் என ஆவேசமாக பேசினார். இதற்கு சிவபத்மநாபன் மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவமா? என மிரட்டியதோடு சேலை பிடித்து இழுத்ததாக கூறப்பட்டது.
இந்த விவகாரம் திமுக தலைமையின் காதுகளுக்கு எட்டவே தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து சிவபத்மநாபனை விடுவிக்கப்பட்டதோடு அவருக்கு பதிலாக ஜெயபாலன் என்பவர் தென்காசி மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தால் இரு தரப்புக்கும் இடையே இருந்து வந்த உரசல் போக்கு தற்போது தாக்குதல் நடத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது. தென்காசி மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபனின் ஆதரவாளரான ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டனின் ஆதரவாளர்கள் தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவி தமிழ்ச்செல்வியின் வீட்டை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததால் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்ச்செல்வி மனு அளித்துள்ளார். அந்த மனுவில் "நேற்று 05.11.2023 மாலை 4 மணிக்கு நான் வீட்டில் இருக்கும்போது ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவியோடு எப்போதும் இருக்கும் மூன்று பேர் வந்து கதவைத் தட்டி தகாத வார்த்தைகளால் பேசி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

எனக்கு பல தரப்புகளில் இருந்து மிரட்டல்கள் வருகின்றன 5ம் தேதி சம்பவம் குறித்து ஊத்துமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் மாவட்ட கண்காணிப்பாளர் அறிவுரைப்படி விசாரணை நடைபெற்று வருகிறது தாங்கள் எனக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட பணிவாய் வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் செல்வி அளித்த புகாரின் பெயரில் முன்னாள் காவலர் உட்பட 3 பேர் மீது ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் ஆதரவாளராக செயல்பட்டு வரும் ஆலங்குளம் ஒன்றிய அவை தலைவி திவ்யா மணிகண்டனின் ஆதரவாளர்கள் தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவி தமிழ்ச்செல்வியை வீடு புகுந்து மிரட்டிய சம்பவம் தென்காசி மாவட்ட திமுகவில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
English Summary
Tenkasi DMK panchayat president ask police protection