டாஸ்மாக் ஊழல்? அமலாக்கத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்!
Supreme Court ED Raid Tasmac case
தமிழக அரசின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக்-இல் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என அறிக்கை வெளியிடப்பட்டது.
அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனால் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இரு தரப்பும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இன்று அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறைக்கு தொடர் கேள்விகளை எழுப்பியது. “அமலாக்கத்துறை நடவடிக்கை கூட்டாட்சிக்கு முரணல்லையா? வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் மாநில அலுவலகங்களில் நுழைந்து ஆவணங்களை பறிமுதல் செய்ய முடியுமா? மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை யார் கட்டுப்படுத்துகிறார்கள்?” என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு அமலாக்கத்துறை தரப்பு, “டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. நிதி குற்றங்களை மாநில காவல்துறை விசாரிக்கிறது; ஆனால் சட்டவிரோத பணப்பரிமாற்றங்களை நாங்கள் விசாரிக்கிறோம்” என்று விளக்கம் அளித்தது.
தமிழக அரசு தரப்பில், “அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்துக்குள் புகுந்து ஊழியர்களின் கைபேசிகளை பறித்து, அனுமதியின்றி தரவுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். இது தனிநபர் உரிமை மீறல்” என வாதிடப்பட்டது.
வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உத்தரவிட்டது. வழக்கு தொடர்ந்தும் விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
English Summary
Supreme Court ED Raid Tasmac case