உயிருடன் விளையாடும் அலட்சியம்...! துப்புரவுப் பணியாளர் சிகிச்சை அளித்த விவகாரம்...! - ட்விட்டரில் பொங்கி எழுந்த டிடிவி தினகரன்...!
Negligence playing life issue treatment provided by cleaner TTV Dinakaran raged Twitter
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைதள பதிவில், திருப்பத்தூர் அருகே நிகழ்ந்ததாக வெளியாகியுள்ள சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழக சுகாதார அமைப்பின் செயல்பாடு குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், திருப்பத்தூர் அருகேயுள்ள குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத சூழலில், காயமடைந்த ஒருவருக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பில் நிலவும் குறைபாடுகளை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்கள் போதிய அளவில் இல்லாத நிலை தொடர்வது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவ சேவைக்காக வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் வகையில், மருத்துவப் பணியாளர்களுக்குப் பதிலாக பிற பணியாளர்கள் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலை தொடர்வது நோயாளிகளின் உயிர் பாதுகாப்பையே ஆபத்தில் தள்ளக்கூடியதாக அமையும் என்பதால், சம்பந்தப்பட்ட துறைகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு தலைமை மருத்துவமனைகள் வரை விரிவான ஆய்வு மேற்கொண்டு, அனைத்து மருத்துவ மையங்களிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறைக்கும் தமிழக அரசுக்கும் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் உயிர் பாதுகாப்பும் தரமான மருத்துவ சேவையும் எந்த நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதே தனது வலியுறுத்தல் என அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Negligence playing life issue treatment provided by cleaner TTV Dinakaran raged Twitter