தொடரும் தடங்கல்கள்.. எம்.பி தேர்தலிலும் எதிரொலிக்குமோ..? அப்செட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின்..!!
MKStalin upset Nitish did not attend opening kalaingar kottam ceremony
திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 7000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்திருந்தனர். இந்த நிலையில் கடைசி நிமிடத்தில் உடல் நிலையை காரணம் காட்டி கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.
இதேபோன்று சென்னையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க வருவதாகச் சொல்லியிருந்த நிலையில் திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதலில் வருவதாக கூறிய பின்னர் கடைசி நேரத்தில் வர இயலவில்லை என ஸ்டாலினிடம் தெரிவித்து விழாவை புறக்கணித்து விட்டார்.

அதேபோன்று கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளுக்கு முந்தைய நாள் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ரத்து செய்தார். அடுத்தடுத்து ஏற்படும் தடைகளால் அப்செட் ஆன ஸ்டாலினுக்கு தற்போது கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க நிதிஷ்குமாரும் வராதது ஸ்டாலினை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.
இந்த நிலையில் வரும் ஜூன் 23ம் தேதி நிதிஷ் குமார் தலைமையில் பீகாரில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சமீபத்தில் ஒப்புதல் கொடுத்திருந்த ஸ்டாலினிடம் இந்த கூட்டத்திற்கு போகக்கூடாது என சீனியர் அமைச்சர்கள் சிலர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. ஆனால் இதனை தடுக்காமல் பீகார் மாநில அரசு, தமிழ்நாடு அரசுடன் கைகோர்த்து வேடிக்கை பார்க்கிறது என இரண்டு வீடியோகளை ஆதாரமாக காட்டி பீகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான பாஜக கடும் அமளியில் ஈடுபட்டது. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தமிழ்நாடு வந்துவிட்டு சென்ற மறுநாளே இந்த விவகாரம் பீகார் சட்டமன்றத்தில் எதிரொலித்தது.
இந்த முறையும் அதேபோல் நடந்து விடக்கூடாது என்பதற்காக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பயணத்தை தவிர்த்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை கூட்டும் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்ளாமல் டி.ஆர் பாலு கலந்துகொள்வார் என தெரிந்ததால் கலைஞர் கோட்டத்தை நிதிஷ்குமார் திறந்து வைக்க வரவில்லையோ என திமுகவினருக்கே சந்தேகம் எழுந்துள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்வுகளில் அடுத்தடுத்து தடங்கள் ஏற்படுவது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
MKStalin upset Nitish did not attend opening kalaingar kottam ceremony