மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்...! மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது ஆதரவைக் கொடுத்த மல்லை சத்யா...!
Madhurantakam Tarapuram by elections Mallai Sathya met MK Stalin person and offered his support
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக திராவிட வெற்றிக்கழக தலைவர் மல்லை சத்யா அறிவித்துள்ளார். இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது ஆதரவை அவர் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற த.வெ.க., கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால் அந்த 6 சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.இதில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
வாக்குகள் அக்டோபர் 9-ந்தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. ஆளும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய 4 கட்சிகளுக்கு இடையே போட்டி உருவாகும் சூழல் நிலவுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே, தொகுதிகளில் தங்களது பலத்தை நிரூபிக்க ஒவ்வொரு கட்சியும் களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.மற்ற கட்சிகளைவிட முன்கூட்டியே நடவடிக்கை எடுத்த தி.மு.க., இரு தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை முதலில் அறிவித்தது.
அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், திராவிட வெற்றிக்கழக தலைவர் மல்லை சத்யா, இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து அண்ணா அறிவாலயத்துக்கு சென்ற அவர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, த.வெ.க. அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை உருவாகி இருப்பதாக தெரிவித்தார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் களம் ஏற்கனவே சூடுபிடித்துள்ள நிலையில், மல்லை சத்யாவின் இந்த ஆதரவு அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
English Summary
Madhurantakam Tarapuram by elections Mallai Sathya met MK Stalin person and offered his support