கொலை வழக்கு: திமுக முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு ஆயுள் தண்டனை!
Land Dispute Turns Fatal Life Sentence for DMK Ex MLA Kamalakkannan
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நிலத்தகராறில் விவசாயியைக் கொலை செய்த வழக்கில், வந்தவாசி தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ கமலக்கண்ணன் உள்ளிட்ட 7 பேருக்குத் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
வழக்கின் பின்னணி:
2014-ஆம் ஆண்டு மே 17-ம் தேதி, பெரியசெங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனுசாமிக்கும் (48), அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மற்றும் இருசப்பனுக்கும் இடையே நிலம் தொடர்பாக நீண்டகாலமாகப் பகை இருந்துள்ளது.
சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெருமாள் தரப்புக்கு ஆதரவாகக் களமிறங்கிய முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், முனுசாமி, அவரது மனைவி பொன்னி மற்றும் உறவினர்களைக் கத்தியால் கொடூரமாகத் தாக்கினர்.
தலையில் பலத்த காயமடைந்த முனுசாமி, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நீதிமன்றத் தீர்ப்பு:
நீதிபதி ப. மதுசூதனன் முன்னிலையில் நடைபெற்ற இந்த இறுதி விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் மீதான புகார்களும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.
தண்டனை விபரம்:
கமலக்கண்ணன், பெருமாள், இருசப்பன், மதியழகன், நந்தகோபால், சுதாகர் மற்றும் துரைமுருகன் ஆகிய 7 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தண்டனை பெற்றுள்ள கமலக்கண்ணன், கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற வந்தவாசி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Land Dispute Turns Fatal Life Sentence for DMK Ex MLA Kamalakkannan